Advertisment

மத்திய பட்ஜெட் 2018 : அருண் ஜெட்லியின் 1 1/2 மணி நேர உரையில் தெறித்த முக்கிய அறிவிப்புகள்

”தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும்”, என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மத்திய பட்ஜெட் 2018 : அருண் ஜெட்லியின் 1 1/2 மணி நேர உரையில் தெறித்த முக்கிய அறிவிப்புகள்

மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று 11.30 மணியளவில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டுடன் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisment

வருமான வரி சலுகை, 7வது ஊதியக்குழு உள்ளிட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகுமா என எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

மதியம் 12.59:பட்ஜெட் தாக்கல் செய்த அருண்ஜெட்லிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் நரேந்திரமோடி.

மதியம் 12.47: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண்ஜெட்லி.

மதியம் 12.42:மொபைல் ஃபோன்கள் மீதான இறக்குமதி 15 % இருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மதியம் 12.41: மூத்த குடிமக்களுக்கு, வங்கிகளில் கடன் பெறும்போது வட்டி விலக்கு அளிக்கப்படுவதற்கான உச்சவரம்பு ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மதியம் 12.30:”தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும்”

மதியம் 12.27: ”2017-18 நிதியாண்டில் நேரடி வரி 12.6% அதிகரித்துள்ளது. மறைமுக வரி 18.7% அதிகரித்துள்ளது."

மதியம் 12.21: 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரித்தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 66.26 லட்சமாக இருந்தது.

மதியம் 12.17:குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவருக்கான ஊதியம் 5 லட்சமாகவும், துணைக் குடியரசுத்தலைவர் ஊதியம் 4 லட்சமாகவும், ஆளுநர்களின் ஊதியம் 3.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப தானாகவே எம்.பி.க்களின் ஊதியம் மாற்றியமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதியம் 12.14: நிதி பற்றாக்குறை: கடந்த 2017-2018 நிதியாண்டில் ரூ.5.95 லட்சம் கோடியாக (3.5%) நிதி பற்றாக்குறை இருந்தது. 2018-2019 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% நிதி பற்றாக்குறையைக் கொண்டுள்ளதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.

மதியம் 12.11: ஆதார் மூலம் தனிநபர் ஒருவர் தனித்த அடையாளத்தை பெற்றுள்ளதாகவும், விரைவில், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் இத்தகைய ஆதார் எண் வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

மதியம் 12.07: இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மூலம் ராணுவம் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். அந்நிய நேரடி முதலீட்டுக்காக தனி துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மதியம் 12.04: 5 லட்சம் ஹாட்ஸ்பாட் தளங்கள் உருவாக்கப்படும். அதற்காக, ரூ.10,000கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மதியம் 12.00: குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 16 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதிக விமான நிலையங்கள் இணைக்கப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்தார். இந்திய விமான நிலைய ஆணையத்தின்கீழ் 154 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

காலை 11.58: இந்திய ரயில்வேக்கு 2018-2019 நிதியாண்டுக்கு ரூ.1,48,528 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா ரயில் நிலையங்களிலும் வைஃபை, சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

காலை 11.53: ”சுற்றுலா பயணிகளை கவர 10 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும். இதற்கான வசதிகள் அம்ருத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்”

காலை 11.47:வேலைவாய்ப்பு: கடந்தாண்டில் அரசு என்ன செய்தது என்பதை அருண்ஜெட்லி பட்டியலிட்டார். அனைத்து துறைகளிலும் 3 ஆண்டுகளுக்கான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 12%-ஐ மத்திய அரசு பங்கு வகித்துள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார்.

காலை 11.45:முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி செய்யப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூ.10.38 கோடி கடனுதவியில் 70% பெண்களை சென்றடைந்ததாக அருண் ஜெட்லி கூறினார்.

காலை 11.42:”ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பெரிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு சார்பற்ற சொத்துக்களை சமாளிக்க விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”

காலை 11.40:கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். கங்கையை சுற்றி அமைந்துள்ள 115 மாவட்டங்களில் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காலை 11.35: ”10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள்”, என அருண்ஜெட்லி தெரிவித்தார்.

காலை 11.30:” மாணவர்களுக்கு தரமான கல்வியை மேம்படுத்துவதற்காக, கல்வித்துறையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். எஸ்.சி. மாணவர்களுக்கான பள்ளிகளும், ஆசிரியர்களுக்கான திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்.”, என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

காலை 11.27: உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் எனவும், 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும் எனவும் அருண்ஜெட்லி தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இரண்டு கோடி கழிப்பறைகள் அடுத்த ஒரு வருடத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

காலை 11.22: “காற்று மாசுபாட்டை கட்டுபடுத்த ஹரியானா, பஞ்சாப், டெல்லி மாநிலங்களுக்கு நிதி உதவி செய்யப்படும்”, என அருண்ஜெட்லி தெரிவித்தார்.

காலை 11.20: கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

publive-image ராஜ்யசபா எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆனந்த சர்மா குறிப்பெடுக்கிறார்.

காலை 11.17: ‘ஆப்பரேஷன் கிரீன்’ திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளை பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க 42 பிரம்மாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்தார். தேசிய மூங்கில் திட்டத்திற்கு ரூ.1,290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை 11.15: விவசாய சாகுபடி மற்றும் அவற்றை சார்ந்தவற்றிற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11.12:”விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் அதன் உற்பத்தி விலையைவிட, குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்படும். வேளாண் சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

காலை 11.10: விவசாயிகளின் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது எனவும், 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் எனவும் அருண்ஜெட்லி கூறினார்.

காலை 11.05:”நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்; இந்த பட்ஜெட்டில் விவசாயம், கல்வியை வலிமைப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது”.

காலை 11.03:”உலகின் 5 வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா விரைவில் எட்டும். 2018- 2019 ஆம் நிதியாண்டின் 2 ஆம் பகுதியில் 7.2% முதல் 7.5% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்”, என அருண் ஜெட்லி தனது உரையில் தெரிவித்தார்.

காலை 11.00:2018-2019 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

காலை 10.58: மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேச ஆரம்பித்தார். இன்னும் சில நிமிடங்களில் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

காலை 10.50: பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ராணி மற்றும் ராம் விலாஸ் பஸ்வானும் உடன் வந்தனர்.

publive-image

காலை 10.24: பட்ஜெட்டுக்கு முந்தைய கேபினெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. அருண் ஜெட்லி முதலில் இந்தியில் பேச ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10.21: சிபிஐ(எம்) கட்சியின் பொதுச்செயலாளர், “பட்ஜெட்டில் போலியான வாக்குறுதிகளால், இந்த அரசாங்கத்தில் வேலைவாய்ப்பின்மை நிலவிவருவதை மறைக்க இயலாது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மறக்கப்பட்டு தற்போதுள்ள வேலைகள் இழக்கப்பட்டுள்ளன”, என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காலை 10.17: இன்னும் 40 நிமிடங்களில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

publive-image

காலை 10.06: நோய்கள் தடுப்பு மற்றும் சுகாதார ஊக்குவிப்புக்காக, இதுவரை ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ரூ.5,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என சுகாதார துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது. கடந்த பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.47,000 கோடி.

காலை 10.02:இந்தியன் எக்ஸ்பிரஸின் இ.பி.உன்னி-ன் பட்ஜெட் குறித்த கார்ட்டூன்.

publive-image

காலை 9.55: நாடாளுமன்றத்தின் வெளியே காத்திருக்கும் பாதுகாப்பு நாய்கள் சன் மற்றும் சன்னி

publive-image

காலை 9.50: பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வந்தடைந்தார் அருண்ஜெட்லி. இந்த பட்ஜெட்டில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்காக நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

publive-image

காலை 9.42: வழக்கப்படி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் அருண்ஜெட்லி சந்தித்தார். இதுகுறித்து, குடியரசு தலைவர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு.

காலை 9.22: பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் குடியரசு தலைவரை சந்திக்க குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றார் அருண் ஜெட்லி.

publive-image

காலை 9.20:மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்ந்து 36,097 ல் வர்த்தகமாகிறது. மேலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 11,067  புள்ளிகளாக உள்ளது.

காலை 9.05:பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி டெல்லியில் உள்ள நிதியமைச்சகத்திலிருந்து நிதிநிலை அறிக்கையுடன் குடியரசுதலைவர் மாளிகைக்கு விரைந்தார் அருண்ஜெட்லி.

publive-image புதன் கிழமை மாலை தன் அலுவலகத்தில் பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நிதியமைச்சர்.

காலை 9.00:நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2018-2019-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.

Budget 2019
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment