வடக்கு டெல்லியின் பவானா தொழிற்சாலைப் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இந்தப் பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் தரைத் தளத்தில் பற்றியத் தீ இரண்டு தளங்களுக்கும் பரவியது. அப்போது பணியில் இருந்தவர்கள் வெளியில் வரமுடியாமல் மாட்டிக் கொண்டனர். ஒரு சிலர் மாடியிலிருந்து கீழே குதித்து சிறு காயங்களுடன் தப்பித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
பெரும்பாலான உயிரிழப்புகள் தீக்காயத்தால் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சிலர் கடுமையான புகை மூட்டத்தால், மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை சுமார் 6.20 மணியளவில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ, மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியிருக்கிறது. இதுகுறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறுகையில், "மாலை 6.30 மணியளவில் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்டு, கட்டிடத்தில் சிக்கிக் கொண்டு இருந்தவர்களை மீட்டோம். அதேசமயம், 17 உடல்களையும் கைப்பற்றினோம். சிலர் அவர்களாகவே, மேலிருந்து கீழே குதித்து தப்பித்துவிட்டனர். அது ஒரு பட்டாசு கிடங்கு. நிறைய சக்திவாய்ந்த பட்டாசுகள் அங்கு வைக்கப்பட்டு இருந்ததே, இந்த விபத்துக்கு காரணம்.
ஒருவர் தப்பிக்க நினைத்து மாடியில் இருந்து கீழே குதித்த போது, அவரது கால் முறிந்தது. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான லைசன்ஸ் இல்லாமல், இந்த பட்டாசு தொழிற்சாலை நடத்தப்பட்டு வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.