கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக, 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள சோளதேவனஹள்ளி எனும் வனப்பகுதியையொட்டிய கிராமத்தை சேர்ந்த பசவராஜூ என்பவரது 2 வயது குழந்தை வெங்கடேஷ். பசவராஜூ அப்பகுதியில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், புதன் கிழமை மதியம், தன் வீட்டருகே வெங்கடேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஏரண்ணா என்பவருடைய புறா வனப்பகுதிக்கு பறந்துள்ளது. இதையடுத்து, ஏரண்ணாவின் 14 வயது மகன், குழந்தை வெங்கடேஷை அழைத்துக்கொண்டு புறாவைக் கண்டுபிடிக்க வனப்பகுதிக்கு சென்றான். குழந்தை வெங்கடேஷ்க்கு புறா என்றால் பிரியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புறாவைக் கண்டுபிடிக்க சென்ற ஏரண்ணாவின் மகன் மட்டும் வீடு திரும்பிய நிலையில், குழந்தை வெங்கடேஷைக் காணவில்லை. இதையடுத்து, குழந்தை வெங்கடேஷ் வனப்பகுதியில் இறந்துகிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பசவராஜூ அளித்த புகாரின் பேரில் ஏரண்ணாவிடம் விசாரித்தனர். பசவன்னாவுக்கும், ஏரண்ணாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனால், பசவராஜூவை பழிதீர்க்க மகனை ஏரண்ணா கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால், சம்பவம் நடைபெற்ற நேரத்தில், ஏரண்ணா அங்கு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், தன் தந்தையை பிரச்சனையின்போது பசவராஜூ அவமதித்ததால், ஏரண்ணாவின் 14 வயது மகன், குழந்தை வெங்கடேஷை கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில், தான் குழந்தையை கொலை செய்ததை ஏரண்ணாவின் மகன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏரண்ணாவின் மகனை கைது செய்த போலீசார், சிறார் சீர்திருத்த பள்ளியில் அவனை அடைத்தனர்.