பெங்களூருவில் மாற்றுத்திறனாளியான ஏழு வயது மகளை நான்காவது மாடியிலிருந்து இரண்டு முறை வீசி எறிந்து கொலை செய்ததாக அச்சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஸ்வாதி சர்க்கார் மற்றும் அவரது கணவர், 10 வருடங்களுக்கு முன், கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் குடியேறினர். இவர்களுக்கு ஏழு வயதில் இஷிகா என்ற மகள் இருந்தாள். இஷிகா மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி நான்காம் மாடியிலிருந்து, தன் மகள் இஷிகாவை ஸ்வாதி தூக்கி வீசி எறிந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், ஒருமுறை வீசி எறிந்த நிலையிலும், இஷிகா மூச்சு விடவே, அவளை மீண்டும் மேலே தூக்கிவந்து இரண்டாவது முறையாக ஸ்வாது வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இஷிகா உயிரிழந்தாள்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஸ்வாதியை வலுக்கட்டாயமாக பிடித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின்பே அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பின், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஸ்வாதியை கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளியான தன் மகளால் ஸ்வாதி விரக்தியடைந்ததாலேயே, அவர் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஏழு மாதங்களாக ஸ்வாதி தன் கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பெற்றோர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, அவர்களை வளர்ப்பதில் உள்ள சிரமங்களையும், அவர்கள் மீது எவ்வாறு அன்பை காட்ட வேண்டும் என்பது குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது.