மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஆன்மிக குரு பையூ ஜீ மஹாராஜா துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பையூ ஜீ என அழைக்கப்பட்ட இவரின் நிஜப் பெயர் உதய் சிங் தேஷ்முக் ஆகும். குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. காயங்களுடன் பாம்பே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரின் உடலை பரிசோதித்து அவரின் இறப்பினை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.
மகாராஷ்ட்ரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் ஸ்ரீ சத்குரு தத்தா தர்மிக் இவம் பர்மர்திக் ட்ரஸ்ட் மற்றும் சூர்யோதய ஆசிரமங்களை நிறுவி அதன் மூலம் அம்மக்களின் மனதில் நிலைத்து நின்றவர்.
லோக்பால் சட்டத்தினை நிறைவேற்றக் கோரி 2011 ஆகஸ்ட் மாதம் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்ட சமயத்தில் மத்திய அரசின் சார்பாக அன்னா ஹசாரேவிடம் பேசினார் உதய் சிங். அன்றைய சட்ட அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித் மற்றும் டெல்லி அமைச்சர் சந்தீப் திக்ஷித் ஆகியோருடன் கலந்தாலோசித்து லோக்பால் மசோதாவிற்கான வரைவினை உருவாக்கிக் கொடுத்தவர்.
2016ல் தன்னுடைய பொதுவாழ்வில் இருந்து விலகியிருந்த அவருக்கு இவ்வருடம் மத்தியப் பிரதேச அரசு அமைச்சர் பதவி அளித்து சிறப்பித்தது, இருப்பினும் அப்பதவியினை உதய் சிங் நிராகரித்துவிட்டார்.