குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, நேற்று முதல் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பித்துள்ளது.11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். மனுத் தாக்கலுக்கு கடைசி நாள் 28-ஆம் தேதியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 29-ஆம் தேதி நடக்கிறது. ஜுலை 1 வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். ஜூலை 17 அன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். ஜூலை 20 ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜ.க தலைவர் அமித் ஷா மூவர் குழுவை கடந்த 12-ஆம் தேதி அறிவித்தார். இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி இந்த குழு நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் அவர்கள் சந்தித்து பேசுகின்றனர்.
ஒருவேளை, எதிர்க்கட்சிகளுடன் மூவர் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை என்றால், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் அவர் வருகிற 23–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் எனவும் பா.ஜ,க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.