தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக, கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயபிரகாஷ் நட்டா, தமிழக பா.ஜ.வினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமித் ஷா, உள்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து, கட்சியின் புதிய தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜே.பி. நட்டா, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அதன்ஒருபகுதியாக, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி, தேசிய அளவில் வரும் 6ம் தேதி துவங்குகிறது.
தமிழக பா.ஜ.,வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை, சென்னையில் ஜே.பி. நட்டா துவக்கிவைக்கிறார். அதேபோல், பிரதமர் மோடி வாரணாசியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை, தெலுங்கானாவிலும் வரும் 6ம் தேதி துவக்குகின்றனர்.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேறும் ஆட்களை, பிடிக்க அதிமுக மற்றும் திமுக கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஒருபடிமேலே சென்று, அதிமுகவில் கட்சி பொறுப்பு இல்லாமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் உள்ளிட்டோரை பா.ஜ.வில் இழுக்க திட்டம் தீட்டியுள்ளதாக அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 புதிய உறுப்பினர்களைச் சேர்க்குமாறு பி.ஜே.பி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து, சமூக, அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒருவரை மண்டலத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாற்றுக் கட்சியிலிருந்து ஆட்களை இழுக்கத் தலைமை உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.