பட்ஜெட் 2018, வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் வழங்கவில்லை. இதனால் மாதச் சம்பளம் பெற்று வரி செலுத்துகிறவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
பட்ஜெட் 2018, குறித்த பெரும் எதிர்பார்ப்பாக வருமான வரிச் சலுகை இருந்தது. காரணம், முந்தைய ஆண்டைவிட வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், வசூலாகும் தொகையும் வெகுவாக கூடியிருக்கிறது. எனவே வரி செலுத்துவோரை உற்சாகப்படுத்த சில வரிச் சலுகைகளை அருண் ஜெட்லி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
பட்ஜெட் 2018, அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. அருண் ஜெட்லியின் இந்த பட்ஜெட் மாதச் சம்பளதாரர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது. குறைந்தபட்சம் வருமான வரி வரம்பை இரண்டரை லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாக மத்திய அரசு உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பும் நடக்கவில்லை.
பட்ஜெட் 2018 தாக்கலின்போது இது குறித்து பேசிய அருண் ஜெட்லி, ‘கடந்த 3 ஆண்டுகளாக தனிநபர் வருமான வரி விகிதங்களில் சில பாசிட்டிவான மாற்றங்களை செய்திருக்கிறோம். அதனால் இந்த ஆண்டு அதில் எந்த மாற்றங்களையும் செய்ய நான் விரும்பவில்லை’ என நழுவியிருக்கிறார்.
அதேசமயம், மாதச்சம்பளதாரர்களுக்கான போக்குவரத்து மற்றும் மருத்துவம் தொடர்பாக வரிச் சலுகை தொகையை ஒரே சீராக 40,000 ரூபாய் என நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இது நடுத்தரமான சம்பளதாரர்களுக்கு பலன் அளிப்பதாக இருக்கலாம். கடந்த 2014-2015 நிதியாண்டில் 6,47 கோடியாக இருந்த வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, 2016-2017 நிதியாண்டில் 8.27 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 41 சதவிகித உயர்வு ஆகும்.
இதற்காக வரி செலுத்துபவர்களை பாராட்டிய அருண் ஜெட்லி, ‘மோடி அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடரும்’ என்றார்.