உத்தரபிரதேச மாநிலத்தில், செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு அன்றைய தினம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
உத்தரபிரதேச மாநிலம் பேரிலி மாவட்டத்தில் உள்ள நந்தோசி எனும் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றது. அவர் அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டு கடந்ததாக, அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அப்போது, விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில் அவர் நரேஷ் பால் காங்வார் என்பதும், அன்றைய தினம் மாலையில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததும் தெரியவந்தது. அவர் இரண்டு செல்போன்களில், ஒன்றில் பேசிக்கொண்டும், ஒன்றில் மெசெஜ் செய்துகொண்டும் பிஸியாக ரயில்வே தண்டவாளத்தைக் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக மணமகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.