உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்பூர், திரிபுரா மாநிலம் பதர்கட், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா, கேரள மாநிலம் பாலா ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 23-ம் வாக்குப்பதிவு நடந்தது. மறைந்த கே.எம்.மாணி 1965-ம் ஆண்டு முதல் பாலா தொகுதி எம்எல்ஏ.வாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். அவர் மறைந்த நிலையில், 54 ஆண்டு களுக்குப் பிறகு தேர்தல் நடந்தது.
இத்தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் மாணி சி.கப்பென் 2943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஹமீர்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பாஜகவைச் சேர்ந்த அசோக்குமார் கொலை வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி இழந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் பாஜக வேட்பாளர் யுவராஜ் சிங் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 74500 வாக்குகள் பெற்றார். சமாஜ்வாதி வேட்பாளர்57,300 வாக்குகள் பெற்றார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் மூன்றாம் இடமும், காங்கிரஸ் வேட்பாளர் நான்காம் இடமும் பெற்றனர்.
இதேபோல் திரிபுரா மாநிலம் பதர்கட் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் மிமி மஜூமுதார் 20471 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பல்டி பிஸ்வாஸ் 15211 வாக்குகள் பெற்று 2-ம் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் மூன்றாம் இடம் பெற்றார்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேவதி கர்மா 49979 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக பீமா மாண்டவி 38648 வாக்குள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
இதன் மூலம் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலுமே அந்தந்த மாநிலங்களில் ஆளும் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.