Liz Mathew
RSS advises BJP ahead of Assembly elections : எதிர்வரும் உ.பி. தேர்தலுக்கான யூகங்களை பாஜக வகுத்த நிலையில் இதுவரை ஏற்பட்ட தவறான நிகழ்வுகளை பாஜகவிற்கு சுட்டிக்காட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுக வேண்டுமென்றும், சமூகங்களுக்கு இடையே விரோத போக்கினை தூண்ட வேண்டாம் என்றும் பாஜகவை ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொண்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை, இந்த வாரத்தின் ஆரம்பத்தில் நொய்டாவில் நடைபெற்ற பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மேற்கு உத்திரபிரதேசத்தில், சர்ச்சைக்குரிய வகையில் உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அந்த போராட்டத்தை அமைதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதை அவர்களுக்கு எடுத்து உரைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
ஆளுங்கட்சி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜாட் மற்றும் சீக்கிய மதத்தினருக்கு விரோதமாக மாறி வருகிறது என்ற எண்ணம் பரவலாக உள்ள நிலையில் பல மாதங்களாக நடைபெற்று வரும் விவசாய போராட்டம் குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தது ஆர்.எஸ்.எஸ். இந்த போக்கு வருகின்ற தேர்தலில் சேதத்தை விளைவிக்கலாம் என்று கருதுகிறது ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் சிறு சிறு தலைவர்கள் குழுக்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில் இருக்கும் கோபத்தை அரசு குறைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த போராட்டங்கள் பஞ்சாபில் சீக்கியர்கள் மற்றும் ஜாட் இன மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டியுள்ளதாக பாஜகவும் மதிப்பீடு செய்துள்ளது. இருப்பினும் மேற்கு உ.பி மக்கள் வேளாண் சட்டங்களை மட்டுமே கருத்தில் கொண்டு பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள் என்று தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் சமீபத்தில் நான்கு விவசாயிகள் இறந்தது நிலைமையை மோசமாக்கக் கூடும்.
போராட்டக்காரர்களை காலிஸ்தானி பிரிவினைவாதிகளுடன் தொடர்புபடுத்துவதற்கான ஒரு பிரிவின் முயற்சிகளில் கட்சித் தலைவர்கள் இன்னும் பிளவுபட்டுள்ளனர் என்பதை பாஜக வட்டாரங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இது சீக்கிய சமூகத்தில் கட்சியின் பிம்பத்தை மேலும் சேதப்படுத்தியுள்ளது. பஞ்சாபில் தேர்தல் ஆதாயங்கள் குறித்து பாஜக அதிக நம்பிக்கை வைக்கவில்லை என்றாலும், அனைத்து சிறுபான்மை சமூகத்தினரையும் பகைத்துக் கொள்வது கட்சிக்கு நல்லதல்ல என்று மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
இது தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் எம்.பி. வருண் காந்தி கடுமையான விமர்சனங்களை பொதுவெளியில் முன் வைத்தார். பாஜகவை ஒரு இனவாத கட்சியாக சித்தகரிக்கும் செயல்களுக்கு எதிராக செயல்படுங்கள் என்று கட்சி தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடியே கேட்டுள்ளாதால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு கட்சியின் தேசிய நிர்வாகிகளுடனான தொடர் கூட்டத்தில், கட்சி மீது நிலவி வரும் வகுப்புவாத பிம்பத்தை நீக்கும் யுக்திகளை வகுக்குமாறு தலைவர்களை மோடி கேட்டுக் கொண்டார். மேலும் பாஜக கட்சி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கட்சியாக மாற்ற அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருவதால், அதன் முடிவுகள் தேசிய அளவிலும் ஆளும் கட்சிக்கு முக்கியமானதாக இருக்கும். அதே நேரத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கட்சியாக பாஜக இருக்க ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறது. பெரிய இந்து சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சிறிய சமூகங்களை அந்நியப்படுத்துவது தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமை நம்புகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.