சிபிஐ அமைப்பின் முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், புலனாய்வு அதிகாரிக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தது தவறுதான் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மன்னிப்பு கேட்டார். அவரது மன்னிப்பை ஏற்காத நீதிமன்றம் வினோத தண்டனையை விதித்துள்ளது.
பிகாரில் உள்ள ஷெல்டர்-ஹோம்களில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைகளை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.ஷர்மாவை, சிறிது காலத்துக்கு முன்னர் இடைக்கால சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றிருந்த நாகேஸ்வர ராவ் பணியிடம் மாற்றி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த நாகேஸ்வர ராவ், 'இந்த விவகாரத்தில் தவறு செய்து விட்டேன். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கனவிலும் நினைத்ததில்லை. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்' என கூறியுள்ளார்.
ஆனால், அவரது பதிலை ஏற்க மறுத்த நீதிமன்றம், "உங்கள் மன்னிப்பை ஏற்க முடியாது. ஓரு லட்சம் ரூபாய் அபராதம் கட்டுங்கள். நாங்கள் வழக்கு விசாரணையை முடித்து எழுந்திருக்கும் வரை நீதிமன்றத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருங்கள். உங்களை, நாங்கள் 30 நாள் வரை சிறையில் அடைக்க முடியும் என்பதை உணர்கிறீர்களா?' என்று கேள்வியெழுப்பி தண்டனை விதித்தது.