இந்தியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு கடந்த சில நாள்களாக 3 லட்சத்துக்கும் மேல் பதிவாகியது. இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பில் திடீரென சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய நாள் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 ஆக பதிவானது.ஒரே நாளில் தினசரி கொரோனா பாதிப்பில் பெரியளவில் மாற்றம் வந்தது, கொரோனா 3ஆம் அலை முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
உயிரிழப்புகள் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது. ஒரே நாளில் 614 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 462ஆக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 15.52ஆக உள்ளது.
தொற்று பாதிப்பிலிருந்து 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், கொரோனா 3 ஆம் அலை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மாதத்தில் உச்சமடையும் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, கொரோனா பரிசோதனையை குறைத்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மீண்டும் பரிசோதனை அதிகரிக்க வேண்டும். கொரோனா சோதனை மற்றும் தடுப்பூசி தரவை சரியான நேரத்தில் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதால், தேசிய வழிகாட்டுதல்களின்படி அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil