Chennai-Bengaluru Passenger trains : ஏழைகளின் விமானம் என்று செல்லப்பெயர் பெற்ற ரயில் பயணங்கள் தான் பொதுவாக அனைத்து தரப்பினராலும் பயன்படுத்துக் கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேவைகளை கவனத்தில் கொண்டு தனியார் ரயில் சேவைகளை இயக்க இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
Chennai-Bengaluru Passenger trains
டெல்லியில் இருந்து லக்னோ, மும்பையில் இருந்து சீரடி என ஏற்கனவே திட்டத்திற்கு தயாராக சில மார்க்கங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அதே போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கும், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கும் தனியார் பயணிகள் ரயிலை அறிமுகம் செய்ய உள்ளது இந்திய ரயில்வே. இவை அனைத்தும் 500 கி.மீக்கும் குறைவான பயண தூரங்களையே கொண்டுள்ளது.
சென்னை - பெங்களூரு
இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் இடையேயான சேவை, தென்னக ரயில்வேயில் மிக முக்கியத்துவம் கொண்ட சேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அலுவல் ரீதியாக அடிக்கடி பயணிப்பவர்கள், படிப்பு, வேலை என்று ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணிக்கும் மார்க்கம் இது. 342 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த இரு பெரு நகரங்களையும் இணைக்க தினமும் 26 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை மெயில், ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ் என புகழ்பெற்ற ரயில்கள் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. ரயில் எண் 12028 கொண்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து சென்னை வர வெறும் 5 மணி நேரங்களே எடுத்துக் கொள்கிறது. காலையில் 6 மணிக்கு ரயில் ஏறினால் காலை 11 மணிக்கு சென்னை வந்திறங்கிவிடலாம். ஒரு நாள் வேலைக்காக வருபவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது இந்த ரயில். இந்த 26 ரயில்கள் இல்லாமல் புதிய ரயில் சேவைகளை தனியார் இயக்கலாம்.
டெல்லி - லக்னோ சேவை
டெல்லி - லக்னோ இடையே ரயில் சேவைகள் என்றும் பரபரப்பானவை மேலும், நாள் ஒன்றுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 500 கி.மீ பயணத்தை மிக குறைவான நேரத்தில் கடப்பது சதாப்தி மட்டும் தான். 06.30 மணி நேரத்தில் கடந்துவிடுகிறது.
மும்பை - சிரடி
சிரடியில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு ரயில் சேவைகள் அதிகமாக விரிவுபடுத்தப்படவில்லை. மேலும் சதாப்தி ரயில்கள் இந்த மார்க்கத்தில் இயக்கப்படவில்லை. 330 கி.மீ பயண தூரத்தைக் கொண்ட இந்த மார்க்கத்தில் இரண்டு அதிவிரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மார்க்கத்திலும் இரண்டு ட்ரெய்ன்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை நிறைவேற்ற உள்ளது இந்தியன் ரயில்வே. வருகின்ற 100 நாட்களுக்குள் முதல் ரயிலை அனுப்பவும் திட்டம்.
மேலும் படிக்க : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...