சென்னை கஸ்டம்ஸ் இணையதளத்தை முடக்கியவர்கள் யார்? என கேள்வி எழுந்தது. சுதந்திர காஷ்மீரை ஆதரித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அதில் வாசகங்கள் இருந்தன.
சென்னை, பாரிமுனையில் மத்திய சுங்கத்துறை (கஸ்டம்ஸ்) அலுவலகம் உள்ளது. இதற்கென தனியாக இணையதளம் இருக்கிறது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அதிபர்கள் சுங்கத்துறை தொடர்பான விவரங்களை அறியவும், தங்கள் குறைகளை குறிப்பிடவும் இதை பயன்படுத்துகிறார்கள்.
இன்று (நவம்பர் 17) காலையில் இந்த இணையதளம் திடீரென முடக்கப்பட்டிருந்தது. அதைவிட ஷாக், அதில் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக வாசகங்கள் இருந்ததுதான். தவிர, பிரதமர் நரேந்திர மோடியை போகச் சொல்லும்படியாக, ‘கோ மோடி கோ’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இந்த இணையதளத்தை முடக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கியூ பிரிவு உள்ளிட்ட போலீஸ் படையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றான சுங்கத்துறையின் இணையதளத்தை முடக்கியதன் மூலமாக தீவிரவாதிகள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள முனைந்திருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.
எனினும் பிற்பகலில் அதிகாரிகள், கம்ப்யூட்டர் நிபுணர்கள் துணையுடன் இணையதளத்தை மீட்டனர். அதிலிருந்து தகவல்கள் சிலவற்றை ஹேக்கர்கள் திருடியிருக்கலாம் என கருதப்படுகிறது. அது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.