நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இடைத் தேர்தலை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக, சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பின் போது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதுதவிர, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவு வந்தது. இதனையடுத்து, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்ற நிலையை டிடிவி தரப்பு எடுத்தது.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், "திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், தமிழகத்தின் இடைத் தேர்தல்கள் தொடர்பாக அறிவிக்கப்படும். இடைத்தேர்தல் ஒத்திவைக்காமல் இருந்திருந்தால் புயலால் தேர்தலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். அதனால் நாங்கள் ஒத்திவைத்தது சரிதான் தேர்தல் ஆணையம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.