இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வியாழக்கிழமை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில், நீதிபதி சரத் அரவிந்த் பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்துள்ளார்.
அக்டோபர் 3, 2018 அன்று இந்தியாவின் 46 வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறுவார். மரபுப் படி, இந்திய தலைமை நீதிபதி தனது பதவிக்காலம் நிறைவடைய ஒரு மாதத்திற்கு முன்பே, மூத்த நீதிபதி ஒருவரின் பெயரை அடுத்த தலைமைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன்படி, நீதியரசர் அரவிந்த் பாப்டே பெயரை, ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்துள்ளார்.
யார் இந்த நீதிபதி எஸ் ஏ பாப்டே?
இரண்டாவது மிக மூத்த நீதிபதியான எஸ் ஏ போப்டே மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும், பல முக்கிய பெஞ்சுகளில் அங்கம் வகித்தும் வருகிறார். மும்பை மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகம், நாக்பூரின் மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி வரும் பாப்டே, 2021 ஏப்ரல் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.
வழக்கறிஞர்கள் குடும்பத்தில் இருந்து வந்த பாப்டே, 1978 இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். செப்டம்பர் 13, 1978ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் பயிற்சி பெற்று, பின்னர் 1998ல் மூத்த வழக்கறிஞரானார். மார்ச் 29, 2000 அன்று பாம்பே உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக போப்டே நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 12, 2013 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.
ஆதார் வழக்கு, தற்போதைய அயோத்தி வழக்கு போன்ற குறிப்பிடத்தக்க வழக்குகளின் பெஞ்ச்களில் பாப்டேவும் அங்கம் வகிக்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் அயோத்தி வழக்கில் அவர் தீர்ப்பு அளிக்க வேண்டியதுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்துவரும் அயோத்தி பிரச்சனைக்கு ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளிக்க உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.