பாஜகவின் உச்சப்பட்ச அதிகாரம் கொண்ட 'பார்லிமென்டரி போர்டு' என அழைக்கப்படுகிற ஆட்சிமன்றக்குழு நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இந்த குழு தான் கட்சியின் கொள்கை போன்றவற்றில் முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த குழு நேற்று மாற்றியமைக்கப்பட்டது. 11 பேர் கொண்ட குழுவில் 6 புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் டியூரப்பா, இக்பால் சிங் லால்புரா, மத்திய அமைச்சர் சர்வானந்த சோனாவால் உள்பட 6 பேர் ஆட்சிமன்றக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவும் நேற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மூத்த பெண் தலைவிகளில் ஒருவரும், அதன் மகளிர் பிரிவான மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவியுமான தமிழ்நாட்டின் வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளார்.
52 வயதான வானதி சீனிவாசன் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) நெருங்கிய தொடர்பு உள்ளவர். பாஜக மூத்த தலைவரான பொன் ராதாகிருஷ்ணனால் கட்சியில் வழிநடத்தப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தில் 4 பாஜக எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்.
வானதியின் அரசியல் பிரவேசம் ஆர்எஸ்எஸ்ஸுன் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் தொடங்கியது. மாணவர் அமைப்பு மூலம் தொடங்கியது. கல்லூரி வளாகங்களில் இந்த அமைப்பு செயல்படும். வானதி சீனிவாசன் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் 2016இல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாஜகவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணங்களால் தொடக்கத்தில் இவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இருப்பினும் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை தீர்த்து வைக்க உதவினார்.
முன்பு ஒருமுறை தி இந்தியன் எக்பிரஸ்ஸுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், "மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் தனக்கு பலவிஷயங்களில் பக்க பலமாக இருந்துள்ளார். என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார், அரசியலில் பெண்களின் அவசியம் பற்றி கூறியுள்ளார்" என்றார்.
"எனக்கும் பிரச்சனைகள் உள்ளன. இப்போதும் நான் அதை எதிர்கொள்கிறேன். ஆனால் ஒரு குடும்பத்தில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களின் கலவையாகதான் இதை பார்க்கிறேன். அதனால்தான் இதைப் பற்றி வெளியில் பேசுவதில்லை. சில போட்டியாளர்கள் பின்னர் நண்பர்களானார்கள். எதிர்கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தார்கள். எனவே நான் மக்களுக்கு சேவை செய்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.