காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும், வலிமையான தலைமை தேவை என வலியுறுத்தி சோனியா காந்திக்கு கட்சியின் 23 மூத்த தலைவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு கடிதம் எழுதியிருந்தனர். அந்த குழுவின் பல தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் கட்சியில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை விமர்சித்திருந்தனர்.
ஐடியா எக்ஸ்சேஞ்ச் அமர்வில் பேசிய கார்கே, கொரோனா தொற்றுநோய் காலத்தில் ஜி23 தலைவர்கள் காணாமல் போனார்கள். அவர்கள் கட்சியை அழித்துவிடக்கூடாது. அவர்களுக்கு கட்சி அதிகம் செய்துள்ளது என்று கூறினார். இந்த நிலையில் சில G23 தலைவர்கள் இந்த விஷயத்தை சோனியா காந்தியிடம் எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி அளித்த விருந்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள், ஜி23 தலைவர்கள் கலந்துகொண்டனர். கபில் சிபில் கூறுகையில், " அரசியலில், நீங்கள் குதிப்பதற்கு முன்பும் பேசுவதற்கு முன்பும் சிந்திக்க வேண்டும்" என்றார்.
விருந்து தொடர்பான கேள்விக்கு கார்கே தனது கருத்தை தெரிவித்தவுடன்,தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கபில் சிபில் கூறுகையில், கட்சியில் இருந்து எல்லாவற்றையும் பெற்றவர்கள் கட்சியை அழிக்க நினைக்கக் கூடாது என்று சில மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, கட்சிக்காக எல்லாவற்றையும் கொடுத்தவர்களைக் குறிப்பிடுவதை அவர் மறந்துவிட்டார். எங்களில் சிலர் கட்சியைக் உருவாக்குவதில் பங்களித்தவர்கள். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேசியப் போராட்டத்தில் கட்சி திறம்படச் செயல்படவும் தொடர்ந்து விரும்புகிறோம். நாங்கள் ஆக்கபூர்வமான மாற்றத்தின் முகவர்கள்" என கூறினார்.
ராஜ்யசபா காங்கிரஸ் துணைத் தலைவரும் CWC உறுப்பினருமான ஆனந்த் சர்மா கூறுகையில், "நான் வாழ்நாள் முழுவதும், காங்கிரஸ் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட காங்கிரஸ் மனிதர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வலுவான மற்றும் ஒற்றுமையான காங்கிரசுக்காக நிற்கிறேன். எந்தவொரு சர்ச்சையும் எதிர் விளைவை ஏற்படுத்தும். " என்றார்.
மக்களவை எம்பி சசி தரூர் கூறுகையில், "கார்கேவின் கருத்து துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ் சகாக்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாகவும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கார்கே மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். பாஜகவுக்கு எதிரான பரந்த தேசிய போராட்டத்தில் கட்சியை வலுப்படுத்த நாம் அனைவரும் சமமாக அர்ப்பணிப்புடன் இருப்பதை கார்கே பாராட்டுவார் என்று நம்புகிறேன்" என்றார்.
காங்கிரஸ் எம்.பியும், G23 தலைவர்களுள் ஒருவருமான மணீஷ் திவாரி கூறுகையில், "கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே மீது எனக்கு நல்ல மரியாதை உள்ளது. எனக்கு நினைவிருக்கும் வகையில், கபில் சிபில் அளித்த இரவு விருந்தில் எந்த உட்கட்சி விஷயங்களும் விவாதிக்கப்படவில்லை. கார்கே என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருந்தால், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின்போது எனது தொகுதியிலும் அதற்கு அப்பாற்பட்டும் நான் செய்த அனைத்தையும் எடுத்துக்கூறியிருப்பேன். இதுபோன்ற பொதுவான அறிக்கைகள் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். இவை தவிர்க்கப்பட வேண்டும்" என்றார்.
கொரோனா காலத்தில் G23 தலைவர்களின் தனிப்பட்ட பங்களிப்புகள் பற்றி கார்கே கூறிய கருத்துகளுக்கு பதில் அளித்துள்ள சிபில், "கொரோனா காலங்களில் எங்களின் பங்களிப்பு கார்கேவுக்கு தெரியாமல் இருக்கலாம். கார்கே போன்றவர்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுவதால், எங்கள் தொகுதி மட்டுமல்லாமல் மற்ற இடங்களில் உள்ள மக்களுக்கும் உதவி செய்தோம். அவரைப் போலல்லாமல், இந்த விஷயத்தில் அவருடைய சான்றுகளை நாங்கள் சந்தேகிக்கவில்லை. கட்சி ஒற்றுமை ஒரு பெரிய எதிர்க்கட்சி ஒற்றுமையின் கருவாகும். இது வரவிருக்கும் ஆண்டுகளில் பாஜகவை எதிர்கொள்ள ஒரே வழி" என்றார்.
சிபல் அளித்த விருந்து குறித்தும், ஜி 23 தலைவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் கேட்டபோது, ராஜ்யசபாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ஐடியா எக்ஸ்சேஞ்சில் கூறியதாவது," இது கபில் சிபலின் பிறந்தநாளுக்கான விருந்து, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்திருப்பார்கள். ஆனால் நான் அங்கு இல்லை. ஆனால், பஞ்சாபில் போராடும் மக்களுக்கு முன்பாக எங்கள் கட்சியின் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தால், அது எங்கள் கட்சியை வலுப்படுத்துமா? அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. ஆனால் கட்சியிலிருந்து எல்லாவற்றையும் பெற்றவர்கள் கட்சியை அழிக்க நினைக்கக்கூடாது" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.