Arnab Goswami Whatsapp Chats Issue : இந்திய ராணுவ ரகசியங்கள் குறித்து வாட்ஸ்அப்பில் உரையாடிய ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நேற்று காந்திவலியில் உள்ள சம்தா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் நிர்மல்நகர் காவல் நிலையத்தில், தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு எதிராக மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் இயங்கி வந்த தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாமில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்த ரிபப்ளிக் டிவியின் தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி இது குறித்து வாட்ஸ்அப்பில் தனது நண்பர் ஒருவருடன் உரையாடியுள்ளார். இது குறித்து வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அர்னாப் கோஸ்வாமி முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவிடமும் இது குறித்து உரையாடியதாக தகவல் வெளியானது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பல்வேறுஅரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் சாவந்த் மற்றும் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுடன் நேற்று காந்திவலியில் உள்ள சம்தா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதன்பிறகு சச்சின் சாவந்த் தனது ட்விட்டர் பதிவில், “ஓஎஸ்ஏ பிரிவு 5 ஐ மீறியதற்காக அர்னாப் கோஸ்வாமி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த தாக்குதல் குறித்து அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தது யார் என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும். டி.ஆர்.பி வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக தாஸ்குப்தா மற்றும் கோஸ்வாமி இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளன. இதில் தாஸ்குப்தா உட்பட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"