Advertisment

ராகுல் போட்டியிடமாட்டார் என காங்கிரஸ் சிக்னல்; களத்தில் இறங்கிய கெலாட், சசி தரூர்

ராகுல் காந்தி போட்டியிடமாட்டார் என தெரிவித்த காங்கிரஸ்; தலைவர் தேர்தல் போட்டிக்கான வேலைகளைத் தொடங்கிய அசோக் கெலாட் மற்றும் சசி தரூர்

author-image
WebDesk
New Update
ராகுல் போட்டியிடமாட்டார் என காங்கிரஸ் சிக்னல்; களத்தில் இறங்கிய கெலாட், சசி தரூர்

Manoj C G 

Advertisment

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஒரு வார கால அவகாசம் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பில்லை என்று அக்கட்சி முதன்முறையாக புதன்கிழமை அறிவித்தது.

இதற்கிடையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, தலைமைக் கழகம் கேட்டால், தலைமைப் பதவிக்கு போட்டியிடுவேன் என்று கூறினார். மேலும் முதலமைச்சராக தொடர விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 5 மாநில தேர்தல்: பாஜக செலவிட்டது இவ்வளவா? 2017ஐ விட 58% அதிகம்

மக்களவை எம்.பி சசி தரூரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அடித்தளத்தை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரியை அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் சந்தித்த அவர், வேட்புமனு தாக்கல், பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலில் வாக்களிக்கும் சுமார் 9,000 மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் பிரதிநிதிகளின் வாக்காளர் பட்டியலையும் அவர் பார்வையிட்டார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், தானும் தேர்தலில் போட்டியிடலாம் என்று குறிப்பிட்டார். அசோக் கெலாட் மற்றும் சசி தரூருக்கு இடையேயான விருப்பத்தை கேட்டபோது, ​​திக் விஜய் சிங் NDTV 24×7 இடம் கூறினார்: "வேட்பு மனுவின் கடைசி தேதி முடிவடையட்டும்... அப்போது தான் சாய்ஸ் குறித்து நமக்குத் தெரியும்... நான் என்னை போட்டியிலிருந்து வெளியேற்றவில்லை. நீங்கள் ஏன் என்னை வெளியே வைத்திருக்க விரும்புகிறீர்கள்?".

ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றால் தான் களத்தில் இறங்குவேன் என்று அசோக் கெலாட் தொடர்ந்து கூறி வந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

தகவல் தொடர்புக்கு பொறுப்பான AICC பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ராகுல் வெள்ளிக்கிழமை டெல்லிக்கு செல்லலாம், அது பாரத் ஜோடோ யாத்திரைக்கான ஓய்வு நாள் ஆகும். ஆனால் இந்த பயணம் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பிய அவரது தாயைப் பார்ப்பதற்காக இருக்கும் என்று கூறினார்.

publive-image

ராகுல் வெள்ளிக்கிழமை டெல்லிக்கு செல்வாரா என்று கேட்டதற்கு, ஜெய்ராம் ரமேஷ், “அவர் சாலக்குடியில் ஓய்வெடுக்கலாம் (வியாழன் இரவு யாத்திரை நிறுத்தப்படும் இடம்). ஆனால் அவர் டெல்லிக்கு சென்றால், குறைந்தது மூன்று வாரங்களாக பார்க்காமல் இருக்கும் அவரது தாயாரைப் பார்ப்பார்... ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை,” என்று கூறினார்.

“அவர் 23ம் தேதி இரவு திரும்பி வருவார். பாரத் ஜோடோ யாத்திரை 24ம் தேதி காலை மீண்டும் தொடங்கும். மேலும் ஜூம் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. டெல்லியில் நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ராகுல் காந்திக்கு வரும் 24 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை டெல்லி செல்லும் திட்டம் எதுவும் இல்லை,” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இதற்கிடையில் டெல்லியில் இறங்கிய அசோக் கெலாட், சோனியாவை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால்-ஐ தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக்-ம் சோனியாவை சந்தித்துப் பேசினார்.

அசோக் கெலாட் போட்டியிடாத பட்சத்தில், ‘பிளான் பி’ வேட்பாளராக முகுல் வாஸ்னிக் நிறுத்தப்படலாம் என பேசப்பட்டு வரும் நிலையில் அவர் சோனியாவைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர்க்க முடியாததாகத் தோன்றும் ஒரு போட்டியின் போது அவர்கள் நடுநிலையுடன் இருப்போம் என்று காந்தி குடும்பம் சமிக்ஞை செய்த போதிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. முகுல் வாஸ்னிக் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். அசோக் கெலாட் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முகுல் வாஸ்னிக் பொதுச் செயலாளராக (அமைப்பு) நியமிக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தலைவராக இரண்டு வருடங்கள் சோனியா இருந்து வந்த நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு சோனியா காந்தியை ஜிதேந்திர பிரசாத் எதிர்கொண்ட போது காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை காங்கிரஸ் கண்டது.

அசோக் கெலாட் முதலமைச்சராக தொடர்வது என்பது இன்னும் விடை காணப்படாத மற்றொரு பெரிய கேள்வி. அவர் முதலமைச்சராகத் தொடர முடியாது என்று பல தலைவர்கள் உதய்பூர் சிந்தன் ஷிவிரில் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘ஒரு நபர், ஒரு பதவி’ கொள்கையை வலியுறுத்தினர். G-23 இன் தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தங்கள் கோரிக்கை முழுநேர தலைவர் வேண்டும் என்பது என்று கூறினார்.

முதல்வராகத் தொடர்வது குறித்து அசோக் கெலாட், “கட்சி எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. கடந்த 40-50 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்து வருகிறேன். பதவிகளும் பொறுப்புகளும் எனக்கு முக்கியமில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவது மிக முக்கியமானது... இன்று நான் முதல்வர்... அந்த பொறுப்பை நான் நிறைவேற்றுகிறேன்... நிபாதா ரஹுங்க மே (நான் அதை நிறைவேற்றிக்கொண்டே இருப்பேன்)” என்று கூறினார்.

'ஒரு நபர், ஒரு பதவி' விதி பற்றி கேட்டபோது, ​​ பரிந்துரைக்கப்பட்ட பதவிகளுக்கு இது பொருந்தும் என்று அசோக் கெலாட் கூறினார்.

publive-image

“இங்கே, இது ஒரு வெளிப்படையான தேர்தல், எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் அல்லது முதல்வர் என 9,000 பிரதிநிதிகளில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஒரு மாநில அமைச்சர் போட்டியிட விரும்புகிறார் என்று சொல்லுங்கள், அவர் அமைச்சராக இருந்து காங்கிரஸ் தலைவராக இருக்கலாம், ”என்று அசோக் கெலாட் கூறினார்.

முதலமைச்சராக தொடர்வீர்களா என்று குறிப்பாகக் கேட்டதற்கு, அசோக் கெஹ்லாட், “காலம் பதில் சொல்லும்... ஆனால் எனது இருப்பு கட்சிக்கு நன்மை செய்யும் இடத்தில்... நான் எங்கிருந்தாலும்... ஒரு பதவி, இரண்டு பதவிகள், மூன்று பதவிகள் அல்லது எந்தப் பதவியும் இல்லாமல் இருக்க விரும்புகிறேன்,” என்று கூறினார்.

கட்சியில் உள்ள அனைவரின் நம்பிக்கையையும் தாம் பெற்றுள்ளதாக அசோக் கெலாட் கூறினார். காந்தி குடும்பத்தினர் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:

“இது காந்தி குடும்பம் மட்டுமல்ல. காங்கிரஸில் உள்ள அனைத்து மக்களும், அவர்களது குடும்பத்தினரும் என்னை நம்புகிறார்கள். மேலும், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் என்னை நேசிப்பதும், நம்புவதும் எனது அதிர்ஷ்டம்... அதனால் நான் இல்லை என்று சொல்ல முடியாது. ஜஹான் முஜே கஹேங்கே... ஃபார்ம் பர்னா ஹை, மெய்ன் ஃபார்ம் பரூங்கா (எங்கெல்லாம் என்னை நிரப்பச் சொன்னாலும், நான் செய்வேன்). நான் என் நண்பர்களிடமும் பேசுவேன்,” என்று கூறினார்.

அசோக் கெலாட் வியாழக்கிழமை மும்பை சென்று அங்கிருந்து கேரளா சென்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார். அசோக் கெலாட் ஷீரடியில் பிரார்த்தனை செய்ய வாய்ப்புள்ளது.

ராகுல் காந்தியுடனான தனது சந்திப்பில், காங்கிரஸ் தலைவராக பதவியேற்க மீண்டும் அவரைக் கோருவதற்கு அதைப் பயன்படுத்துவதாக அசோக் கெலாட் கூறினார். “காங்கிரஸ் தலைவராக அவர் யாத்திரை மேற்கொண்டால், அதிக தாக்கம் ஏற்படும். நான் போய் அவரிடம் பேசிவிட்டு முடிவு செய்வேன்.”

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment