தடுப்பூசிகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மே-ஜூன் மாதத்திற்குள், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது. மேலும், பெங்களூரில் அந்நிறுவனத்தின் புதிய உற்பத்தி அமைப்பைக் கட்டுவதற்கு ரூ .65 கோடி மானியமும் மத்திய அரசு வழங்க உள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை, நாட்டில் அதிகபட்சமாக 2,17,353 பேருக்கு புதிகாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும், 1,185 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்நிலையில், பல மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் அதேவேளையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்களில், அடுத்த 15 நாட்களுக்கான ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் பயன்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில், ஏப்ரல் 20, ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 30 ஆம் தேதிகளில் இந்த 12 மாநிலங்களுக்கு அவர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய 4,880 மெட்ரிக் டன் (எம்டி), 5,619 மெட்ரிக் மற்றும் 6,593 மெட்ரிக் டன் மருத்துவ தர ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை அறிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர்களின் தடையற்ற மற்றும் இலவச இயக்கத்தை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு, பிரதமர் அறிவுறுத்தினார்.
கூட்டத்திற்குப் பிறகு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு சில குறிப்பிட்ட வழிமுறைகளை வெளியிட்டார். அவை, மாநிலங்களுக்கிடையில் மருத்துவ ஆக்ஸிஜனின் இயக்கத்திற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மாநிலங்களுக்கு இடையேயான மருத்துவ ஆக்ஸிஜனின் தடையற்ற இயக்கத்தை அனுமதிக்க போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்ளை, அவர்கள் இருக்கும் மாநில மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக்கூடாது. நகரங்களுக்குள் எந்த நேரத் தடையும் இல்லாமல், ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் வாகனங்களின் தடையற்ற இயக்கம் நடைபெற வேண்டும்.
இந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர்-பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிக்க, மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதலாவதாக, மகாராஷ்டிரா மாநில பொதுத்துறை நிறுவனமான ஹாஃப்கைன் பயோ பார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட் மத்திய அரசிடமிருந்து ரூ .65 கோடியை மானியமாக பெறும். இந்த பொதுத்துறை நிறுவனம் அதன் உற்பத்தி வசதியை 6 மாதங்களுக்குள் தயார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது செயல்பட ஆரம்பிக்கும் போது, மாதத்திற்கு 20 மில்லியன் டோஸ் அளவிற்கு உற்பத்தி திறன் இருக்கும்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள, "ஹைதராபாத், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் (ஐ.ஐ.எல்), மற்றும் பாரத் இம்யூனோலாஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஐ.பி.சி.ஓ.எல்), புலந்த்ஷஹர், ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்களும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்குள் 10-15 மில்லியன் டோஸ் அளவிற்கு உற்பத்தி செய்ய மத்திய அரசு உதவ உள்ளது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் தற்போதைய உற்பத்தி திறன் 2021 மே-ஜூன் மாதத்திற்குள் இரட்டிப்பாகும், பின்னர் ஜூலை-ஆகஸ்ட் 2021 க்குள் கிட்டத்தட்ட 6-7 மடங்கு அதிகரிக்கும், அதாவது 2021 ஏப்ரல் மாதத்தில் 1 கோடி தடுப்பூசி உற்பத்தி அளவுகளில் இருந்து ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 6-7 கோடி தடுப்பூசி வரை உற்பத்தியை அதிகரிக்கும். செப்டம்பர் 2021 க்குள் இது மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம்
சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் நிலையை மறுஆய்வு செய்வதற்காக உள்துறை செயலாளர் பல்லா மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆகியோர் தலைமையில் வெள்ளிக்கிழமை உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், இரு மாநிலங்களின் மருத்துவமனை உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, ஐ.சி.யூ மற்றும் ஆக்ஸிஜன் வசதியுள்ள மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறை, இதன் விளைவாக முக்கியமான சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதில் ஏற்படும் சிரமங்கள், உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி புதிய கோவிட் -19 பாதிப்புகளையும் மற்றும் கோவிட் -19 காரணமாக அதிக இறப்புகளையும் பதிவு செய்கின்றன. சத்தீஸ்கரில் ஒரு வாரத்திற்கு ஏற்படும் புதிய கோவிட் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 6.2% அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 131% அளவிற்கு வாரந்தோறும் புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளது. சத்தீஸ்கரில் 22 மாவட்டங்களில், கடந்த 30 நாட்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக, ராய்ப்பூர், துர்க், ராஜ்நந்த்கான் மற்றும் பிலாஸ்பூர் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள். 2021 ஏப்ரல் 17 முதல் 23 வரை செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் அளவு 34% இலிருந்து 28% மாக 2021 ஏப்ரல் 7 முதல் 13 வரையிலான வாரத்தில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆன்டிஜென் சோதனைகள் 53% இலிருந்து 62% ஆக அதிகரித்துள்ளது என உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை லக்னோ, கான்பூர், வாரணாசி மற்றும் பிரயாகராஜ் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள். 2021 ஏப்ரல் 17 முதல் 23 வரை செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் அளவு 48% இலிருந்து 46% மாக 2021 ஏப்ரல் 7 முதல் 13 வரையிலான வாரத்தில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆன்டிஜென் சோதனைகள் 51% இலிருந்து 53% ஆக அதிகரித்துள்ளது.
இரு மாநிலங்களுக்கும், 10 லிட்டர் சிலிண்டர்கள் மற்றும் 45 லிட்டர் ஜம்போ சிலிண்டர்கள் உள்ளிட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் கடுமையான பாதிப்புகளுக்கு அதிக ஓட்டம் கொண்ட நாசி கானுலாவுடன் கூடிய வென்டிலேட்டர்கள் போன்ற தேவைகள் மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று பூஷன் தெரிவித்தார்.
இந்நிலையில், கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மருத்துவமனைகளை அவசர காலத்திற்கு பயன்படுத்தும்படி இரு மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.