Covid-19 Cases Update : கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு, மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தளர்வு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகளுடன் தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் தற்போதுள்ள நிலையே தொடரும், என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்று இயங்கும் பேருந்துகளில், 20 பேர் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர பிற பகுதிகளில் சிறு நிறுவனங்கள், நூறு சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 639 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Corona latest news updates : இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
‘புதுச்சேரியில் நாளை (செவ்வாய் கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படாது’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகே மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.
முன்னதாக செவ்வாய் கிழமை மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அரசு கூறியிருந்தது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்களில் நேற்றுவரை விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த உணவுக்கு இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது சரியானதல்ல. வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஏழை,எளிய மக்கள் இதனால் பசியால் வாடும் நிலை ஏற்படும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை குறைக்கவில்லை
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தாலே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை
ஆக்கப்பூர்வ கருத்துகளை சொல்லலாம், விமர்சனம் என்ற பெயரில் பழிபோட வேண்டாம்
- அமைச்சர் விஜயபாஸ்கர்
கேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்வு!கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
- கேரள முதல்வர் பினராயி விஜயன்
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மீன்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள், மின் துறையை தனியார் மயமாக்க கூடாது என்றும் மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவையை தொடங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக பேருந்து சேவைகள் மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளன. இதில் ஹாட்ஸ்பாட்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை உயர்த்தவும் கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்கள், மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்திற்கான தடையை தொடரவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
பிரதமர், நிதியமைச்சர் அறிவித்த பொருளாதார நிதித்தொகை ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடிதான்; இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் - ப.சிதம்பரம் ட்வீட்
பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்
ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்
— P. Chidambaram (@PChidambaram_IN) May 18, 2020
ஊரடங்கால் துபாயில் சிக்கிய 178 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். வெளிநாடுகளில் தங்கி உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர 60க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்து 691 பேர் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 178 பேர் சென்னை வந்தனர். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி
சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை
பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரை
முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்"
கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம்
அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் - முதலமைச்சர் உத்தரவு
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது
கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்
குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்
- முதல்வர் பழனிசாமி
கோயம்பேட்டை தொடர்ந்து சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கடை நடத்தி வரும் 150 வியாபாரிகளை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நகரில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ள வாகனங்களுக்கு, ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனத்திற்கு ஒருநாள் கட்டணமான 50 ரூபாயும், இருசக்கர வாகனத்திற்கு 40 ரூபாயும், சைக்கிளுக்கு 15 ரூபாயும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அத்தியாவசிய, அவசரப்பணி மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927லிருந்து 96,169ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109-லிருந்து 36,824 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights