கொரோனா பாதிப்பை தடுக்கும் பொருட்டு தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இன்று ( மே 4ம் தேதி) முதல் பல கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளது. நாட்டில் 20 மாவட்டங்களிலேயே 68 சதவீத கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களிலேயே, கொரோனா பாதிப்பிலான 72 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, மாநில தலைமைச்செயலாளர்களிடையே, மே 3ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த 20 மாவட்டங்களும், நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னை, புனே உள்ளிட்டவைகளிலேயே உள்ளன. இந்த பகுதிகளில் தொற்று பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த அதிக பாதிப்பு கொண்ட 20 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆய்வுக்குழுக்களை அனுப்பி அங்கு கள ஆய்வு நிகழ்த்தியது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த மாவட்டங்களில் சுமார் 100 மில்லியன் மக்கள் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கள ஆய்வு மேற்கொண்ட மத்திய ஆய்வுக்குழுக்கள், தங்களது அறிக்கைகளை, அந்தந்த மாநிலங்களின் கூடுதல் தலைமை செயலாளர் / முதன்மை செயலாளர் / கூடுதல் செயலாளர் (சுகாதாரம்) சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மும்பை, அகமதாபாத், சென்னை, மத்திய டெல்லி, கோல்கட்டா, வடக்கு டெல்லி, கான்பூர் நகரம், கிருஷ்ணா உள்ளிட்ட 8 மாவட்டங்களில், கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக, தலைமைச்செயலாளர்களுடனான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 7 மாவட்டங்களில் தேசிய அளவில் நிகழ்ந்த மரணங்களின் சராசரியான 3.2 சதவீதத்தைவிட அதிகளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
மும்பை, புனே, அகமதாபாத், இந்தூர், சூரத், மத்திய டெல்லி, கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் சராசரி அதிகளவில் உள்ளது.
மும்பை, அகமதாபாத், இந்தூர், தானே, கர்னூல், கோல்கட்டா பகுதிகளில் உள்ள 9 மாவட்டங்களில், தேசிய அளவின் கொரோனா பாதிப்பு சராசரியான 4.4 சதவீதத்தை விட அதிகளவில் பாதிப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு கொண்ட முதல் 20 மாவட்டங்களில், இந்த 9 மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பு போதிய அளவில் இல்லையென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 3ம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது முறையாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில், 13 மாவட்டங்கள் சிவப்பு ஜோன்களாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சசு ஜோன்களாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், சிவப்பு ஜோனில் உள்ள பல பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதலின் படி ஆய்வுகள் பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த முடிவுகளை ICMR போர்டலில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மாநிலங்கள், தங்களது அரசு மருத்துவமனைகளில், போதிய அளவு தனிமை வார்டுகள், ஆக்சிஜன் உபகரணங்கள், ஐசியு வசதிகள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், தனி மனித இடைவெளியை கடுமையாக பின்பற்றுதல், தொடர்பு தடமறிதலை செயல்படுத்துதல், பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தனிமை, வீட்டினில் தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவத்தை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கு ஏற்படுத்துதல், தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தின் பயன்பாட்டை அனைவருக்கும் கிடைக்கச்செய்தல், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு அபாயம் இருப்பதால், அவர்களுக்கு பயன்படும் விதத்தில், புரோபைலாக்சிஸ் உடன் கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கையிருப்பில் வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா பாதிப்பு, சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு குறித்தவைகளை விளக்கும் பொருட்டு மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கொரோனா ஹெல்ப்லைன் நம்பர்களை ஆங்காங்கே மக்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ பணியாளர்கள் போதிய அளவில் பணியமர்த்தப்பட வேண்டும், இந்த நடவடிக்கைகளுக்காக, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட வேண்டும், ஓய்வு பெற்ற டாக்டர்கள், மருத்துவ படிப்பு மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டோரை இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.