Count of dead at Balakot : பாலகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து ஆங்காங்கே வதந்திகளும், உண்மைக்கு மாறான செய்திகளும் பரவி வருகின்ற நிலையில், பாஜக தலைவர் இரண்டு நாட்களுக்கு முன்பு 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவலைத் தந்தார்.
எதிர்க்கட்சியினர், எப்படி உறுதியாக இந்த எண்ணிக்கையை தர இயலும் என்று மாறி மாறி கேள்விக் கேட்கத் துவங்கிவிட்டனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இதர பாஜக தலைவர்கள் யாரும் இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை. இந்நிலையில் ராணுவ வீரர்களின் மீதும் ராணுவ நடவடிக்கைகள் மீதும் தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
Count of dead at Balakot :
ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்கள் சந்திப்பில் “நான் அரசு சார்பாக, எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூற இயலாது. ஏற்கனவே நான் பாலகோட் பகுதியில் இருந்த கட்டிடங்கள் சேதாரமானதை கூறிவிட்டேன். மேலும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய விமானப்படை 20-25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி எந்த ஒரு உயிர் சேதமும் இல்லாமல் திரும்ப வந்ததே பெரிய சாதனை” என்று கூறியுள்ளார்.
அமித் ஷா கூறியதைப் பற்றி கேட்ட போது, விமானப்படை அரசு கூறும் என்று கூறியுள்ளது. பாஜக தலைவர் கூறியது ஒரு தோராயமான எண்ணிக்கை தான். அந்த எண்ணிக்கை அதிகமாகவும் செல்லலாம். அது குறித்து நாம் கேள்வி எழுப்பத் தேவையில்லை. ஆனால் எவ்வளவு சக்தி வாய்ந்த சேதாரத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது என்பது தான் முக்கியம் என்று கூறினார்,
திங்கள் கிழமை அன்று விமானப்படை தளபதி தனோவா கூறிய போது, விமானப்படை எத்தனை பேர் இறந்தனர் என்பதை கணக்கில் கொள்ளமாட்டார்கள். ஆனால் எத்தனை இலக்குகள் தாக்கப்பட்டது என்று தான் கணக்கில் கொள்வார்கள் என்று கூறினார்.
சென்னையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எண்ணிக்கை குறித்து எந்தவிதமான தகவலையும் அளிக்கவில்லை. ஆனால் அது ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை. அதே போல் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பதையும் உறுதி செய்தார்.
வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோஹலேவும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் நிறைய தீவிரவாதிகளும், அவர்களுக்கு பயிற்சி அளித்தவர்களும் கொல்லப்பட்டனர் என்பதை மற்றும் கூறினார்.
உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ”கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்த முழு எண்ணிக்கையும் விரைவில் வெளிவரும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.