மும்பையில் மிக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், ரஷ்ய ஜோடியின் தகாத செயலை போலீசார் கண்டித்ததுடன் உடனடியாக நாடு திரும்பவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பையில் நேற்றுமுதல் மிக கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. வந்துசேர வேண்டிய ரயில்கள் இதுவரை வரவில்லை. பொறுமையாக ஊர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திசை திருப்பிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இன்றும் நாளையும் மித மிஞ்சிய கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், வீட்டில் இருந்தே யாரும் வெளியே வர வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். போலீசார், தீயணைப்புத் துறையினர், தனியார் அமைப்புகள் ஆகியவை முழு வீச்சில் எச்சரிக்கை பணிகளையும், மீட்புப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
மக்கள் உயிரை பாதுகாக்க இவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், மும்பை மாநகரமே இருளில் மூழ்கியுள்ளது. இப்படி பல ஆபத்துகளுக்கு இடையே தத்தளிக்கும் மும்பையில், ரஷ்யாவை சேர்ந்த இளம் ஜோடி மழையை ஒரு பொருட்டாகவே கருதாமல், மும்பையின் பிரபல மரைன் டிரைவ் பகுதியில், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் தகாத முறையில் அமர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது.
தொடர்ந்து அவர்களது அத்துமீறல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை நோக்கி கூச்சலிட அதையும் துளியும் பொருட்படுத்தாமல் தங்கள் வேலையில் மும்முரமாக அந்த ஜோடி ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
டென்ஷனான போலீசார், கீழே இறங்கி வந்து சத்தமிட அதன்பின்பே அந்த ஜோடி அங்கிருந்து கிளம்பியது. பின் அவர்களை விசாரித்ததில், அவர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்றும், மும்பைக்கு சுற்றுலாவிற்கு வந்ததாக கூறியுள்ளனர். அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்த போலீசார், மும்பை மழை குறித்து எச்சரித்து அவர்களை உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தினர்.