இந்தியாவில், 30 கோடிப் பேருக்கு தடுப்பு மருந்து வழங்குவதை நாம் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்றுக்கான உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 22-வது கூட்டம் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்றது.
இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹார்தீப் எஸ். புரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், " இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் வளர்ச்சி இரண்டு சதவீதத்துக்கு குறைந்துள்ளதாகவும், உலகத்திலேயே மிகவும் குறைவானவற்றில் ஒன்றாக உயிரிழப்பு விகிதம் (1.45 சதவீதம்) இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், " நமது இலக்கான 30 கோடிப் பேருக்கு தடுப்பு மருந்து வழங்குவதை நாம் விரைந்து செயலாற்ற வேண்டும்" என்று டாக்டர். ஹர்ஷ் வர்தன் கூறினார்.
இதற்கிடையே, நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.09 சதவீதமாக குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 25,152 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,885-ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இந்தியாவில் பத்து லட்சம் மக்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் குறைவாக (223) உள்ளது.
15 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தேசிய அளவை விட குறைவாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 95.5 லட்சம் (95,50,712) பேர் குணமடைந்துள்ளனர்.