இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான குருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.
குருதாஸ் தாஸ்குப்தா கடந்த பல மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட குருதாஸ் தாஸ்குபதா அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் மூத்த தலைவராக இருந்தார். அவர் 1985 இல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 -இல் ஆண்டில் பன்ஸ்கூரா தொகுதியிலும் 2009 -இல் கட்டல் தொகுதியிலும் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தார்.
குருதாஸ் தாஸ்குப்தா வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். சில காலமாக நுரையிரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் உடல்நிலை சரியில்லாததால் கட்சி பதவிகளில் இருந்து விலகினார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். தாஸ்குப்தாவுக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானதில் வருத்தம் அடைந்துள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் தேசத்திற்கு அவர் செய்த பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன்”என்று மம்தா பானர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.