நாடு முழுவதும, 18.11 கோடி மக்கள், மானிய விலையில் காஸ் சிலிண்டர் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 14.5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் 477.46 ரூபாய் என்ற மானிய விலையில் அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பம், ஆண்டுதோறும் மானிய விலையில், 12 சிலிண்டர்களை மட்டுமே பெற முடியும். அதன் பிறகும் சிலிண்டர் வேண்டுமெனில், சந்தை விலையில் தான் அவர்களால் வாங்க முடியும்.
இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல், சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு மார்ச் வரை, மாதம் தோறும், ஒரு சிலிண்டருக்கு நான்கு ரூபாய் வீதம் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் விலையில், வாட் வரி சேர்க்காமல், மாதம் தோறும் சிலிண்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்த உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை, 1-ஆம் தேதி முதல் இது அமலில் இருந்து வருகிறது. அந்நிறுவனங்கள் 10 முறை காஸ் விலையை உயர்த்தியுள்ளன.
இந்நிலையில், கடந்த மே மாதம் 30-ஆம் தேதி பிறப்பித்த மத்திய அரசின் உத்தரவின் மூலம், மத்திய அரசு அளித்து வரும் மானியத் தொகை முழுவதுமாக நீக்கும் வரை மாதம் தோறும் சிலிண்டர் விலையில், நான்கு ரூபாய் உயர்த்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் வரை இது அமலில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.