கேரளாவில் இறந்ததாக உறவினர்களால் முடிவு செய்யப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்ட பெண், திடீரென எழுந்ததால் எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
கேரளாவை சேர்ந்த ரத்னம் (வயது 40) மஞ்சள்காமாலையால் உள்ளுறுப்புகள் செயலிழந்து கடந்த இரண்டு மாதங்களாக மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவரது உள்ளுறுப்புகள் பல மிகவும் பாதிக்கப்பட்டு உடல்நிலை கவலைக்கிடமானதால், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுமாறு மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து ரத்னத்தை அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வந்தன்மேட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ரத்னம் அசைவற்றுக் கிடந்ததால் அவர் இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் நினைத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் பிணவறைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், சுமார் ஒரு மணிநேரம் பிணவறையில் ரத்னத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மூச்சு விட்டிருக்கிறார் மற்றும் அவரது உடலில் அசைவுகள் தெரிந்தன. இதைக்கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக கட்டப்பன்னா எனும் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவர்களிடம் உறுதி செய்துகொள்ளாமல், உறவினர்களே தவறாக முடிவெடுத்ததால் வந்த வினைதான் இச்சம்பவம்.