இந்திய ஏவுகணை அமைப்பு நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது ஆகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாகிஸ்தான் எல்லையில் இந்திய ஏவுகணை தவறுதலாக விழுந்தது குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வுக்காக ஏவுகணை செலுத்தப்பட்டபோது எதிர்பாராதவிதமாக எல்லையில் இரவு 7 மணியளவில் விழுந்தது. பின்னர்தான் பாகிஸ்தான் எல்லையில் ஏவுகணை விழுந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
இந்த விபத்துக்கு கவலைப்படுகிறோம். இந்த விபத்துக்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்குமாறு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
இந்த சம்பவத்தை அடுத்து, செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் ஆய்வுகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் ஆயுத அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக சரி செய்யப்படும்.
ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானதும் பாதுகாப்பானதுமாகும். மேலும், எங்கள் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
அனைவருக்குமான காங்கிரஸ் தான் இன்றைய தேவை – கபில் சிபலுடன் ஒரு எக்ஸ்க்ளூசிவ்
அத்தகைய அமைப்புகளை கையாள்வதில் நமது அதிகாரிகள் நல்ல அனுபவமும் பயிற்சியும் பெற்றவர்கள் ஆவர் என்றார் ராஜ்நாத் சிங்.
இந்தியா சோதித்த ஏவுகணை எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானில் விழுந்தது. சோதனைக்காக இந்தியா சார்பில் விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணை, தங்கள் நாட்டின் எல்லையில் உள்ள மியா சானு என்ற பகுதியில் விழுந்ததாக பாகிஸ்தான் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை அழைத்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil