/indian-express-tamil/media/media_files/2025/09/23/delhi-digital-arrest-fraud-2025-09-23-11-31-32.jpg)
India's biggest ‘digital arrest’ fraud
தென் டெல்லியின் உயர்தர குடியிருப்புப் பகுதியான குல்மோஹர் பார்க்கில் உள்ள 78 வயதான ஓய்வுபெற்ற வங்கியாளர் நரேஷ் மல்ஹோத்ராவுக்கு, கடந்த ஆறு வாரங்களாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் தினமும் நடக்கும் சந்திப்புகள், காலனியின் பூங்காவில் மாலை நேர நடைபயணங்கள், நெருங்கிய நண்பர்களுடன் அரட்டை, மற்றும் கிளப்பிற்குச் செல்வது என எதுவும் வழக்கத்திற்கு மாறாகத் தோன்றவில்லை.
ஆனால் இந்த ஆறு வாரங்களில் தான், அவர் கணக்கு வைத்திருந்த மூன்று வங்கிக் கிளைகளுக்குச் சென்று, 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு, 21 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ₹22.92 கோடியை மாற்றியுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை மாற்றும்போது கூட, வங்கிக் கிளை மேலாளர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஒரு வங்கியில், பணம் பரிமாற்றம் செய்யப்படும் நேரத்தில், அவர் டீ அருந்திவிட்டு அமைதியாக காத்திருந்தார்.
ஆனால், மல்ஹோத்ரா "டிஜிட்டல் கைது" செய்யப்பட்டிருந்தார். அமலாக்க இயக்குநரகம் மற்றும் மும்பை காவல்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்ட மோசடி கும்பலிடம், தன் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதற்காக சிறிய தொகையை எடுக்கவும் அனுமதி வாங்கினார்.
"நான் ஏதோ பேயால் ஆட்கொள்ளப்பட்டதைப் போலவும், என் சுய சிந்தனையை இழந்ததைப் போலவும் உணர்ந்தேன்; என் சிந்தனை முழுவதுமாக அந்த மோசடி கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்தது," என மல்ஹோத்ரா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
₹22.92 கோடி காணாமல் போனதை தைரியமாக வெளியே சொல்ல, ஆறு வாரங்கள் ஆனது. செப்டம்பர் 19 அன்று அவர் புகார் அளித்ததும், அதே நாளில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு டெல்லி காவல்துறைக்கு, சிக்கலான இந்த பணப் பரிவர்த்தனைகளைத் தேடுவது பெரும் சவாலாக இருந்தது.
இந்த 21 பரிவர்த்தனைகள் மூலம், மல்ஹோத்ராவின் பணம் ஏழு அடுக்குகளில் (layers) 4,236 பரிவர்த்தனைகளாகப் (இன்று வரை) பிரிந்தது. டெல்லி காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் பிரிவின் (IFSO) இணை ஆணையர் ரஜ்னீஷ் குப்தா, "டிஜிட்டல் கைது" வழக்குகளில் திருடப்பட்ட பணத்தை இப்படி அடுக்குவது வழக்கமானதுதான் என்கிறார். "சில வழக்குகளில் 20 அடுக்குகளில் கூட பணம் மாற்றப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். இந்த வழக்கில், பணம் காணாமல் போன உடனே புகார் தெரிவிக்காததால், மோசடி நபர்களைப் பிடிப்பதும், பணத்தை முடக்குவதும் கடினமாகிவிட்டது," என்றார் அவர்.
ஆகஸ்ட் 4 மற்றும் செப்டம்பர் 4 க்கு இடையில், மல்ஹோத்ரா மூன்று வங்கிக் கிளைகளுக்கும் 21 முறை சென்று, ₹22.92 கோடியை 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு RTGS மூலம் மாற்றியுள்ளார். அவரது பணம், யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யூனியன் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற பல வங்கிகளின் கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கிளைகள் உத்தரகாண்ட், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் இருந்தன. இன்று வரை நடந்த 4,236 பரிவர்த்தனைகளில், ஒன்று கூட புது டெல்லியில் உள்ள வங்கிக்கு மாற்றப்படவில்லை.
மல்ஹோத்ரா சுமார் ஐம்பது வருடங்களாக அரசு மற்றும் தனியார் வங்கிகளில் உயர் பதவிகளில் பணியாற்றி, 2020ல் ஓய்வு பெற்றார். அவர் பணம் எடுத்த மூன்று வங்கிக் கிளைகளும் அவரது வீட்டிற்கு அருகில் தான் இருந்தன. மத்திய வங்கியின் கிளை ஐந்து நிமிட நடைபயண தூரத்திலும், மற்ற இரண்டு எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி கிளைகள் காரில் பத்து நிமிட தூரத்திலும் இருந்தன. ஆனால் வங்கிகளின் மேலாளர்களால், அவர் கட்டாயத்தின் பேரில் பணம் மாற்றுகிறார் என்பதை உணர முடியவில்லை. இந்தப் பணம் அவரது வாழ்நாள் சேமிப்பின் பெரும் பகுதியாக இருக்கலாம்.
இணை ஆணையர் குப்தாவின் கூற்றுப்படி, மல்ஹோத்ராவின் பணத்தில் ₹2.67 கோடி பல்வேறு வங்கிக் கணக்குகளில் இதுவரை முடக்கப்பட்டுள்ளது. "ஆனால் இது திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதால், நாங்கள் திருப்தியடையவில்லை, இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது," என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 19 அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மல்ஹோத்ரா அந்த அதிர்ச்சியான அனுபவத்தை நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 1 அன்று, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரது அடையாள அட்டை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிணைத் தொகையாக பணம் அனுப்பினால் தான் ரிசர்வ் வங்கி மற்றும் உச்ச நீதிமன்றம் மூலம் பிணை பெற்றுத் தர முடியும் என்றும், அந்த பணம் பின்னர் திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஆறு வாரங்களும், மல்ஹோத்ரா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூட இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. "இந்த ஆறு வாரங்களும், எனது அன்றாட செலவுகளுக்கும், ஊழியர்களின் சம்பளத்திற்கும் பணம் எடுக்க வேண்டுமென்றால் கூட, அந்த மோசடி நபர்களிடம் அனுமதி வாங்க வேண்டியிருந்தது... அவர்கள் என் வாழ்க்கையை முழுமையாகக் கைப்பற்றினர்," என்றார்.
அவரது சேமிப்பின் பெரும் பகுதி ஒரு எச்.டி.எஃப்.சி. டிமேட் கணக்கில் பாதுகாப்பாக முதலீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்களில் அந்தப் பணம் மூன்று வங்கிக் கணக்குகளுக்கும், பிறகு அங்கிருந்து 21 தவணைகளாக RTGS மூலம் 16 வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றப்பட்டது. ₹22.92 கோடியை மோசடி செய்த பிறகு, செப்டம்பர் 19 அன்று, மோசடி நபர்கள் மேலும் ₹5 கோடி கோரினர். அப்போதுதான் மல்ஹோத்ராவுக்கு ஒரு மாற்றம் ஏற்பட்டது.
அந்த ₹5 கோடியை மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என மோசடி நபர்கள் கூறினர். "நான் மூன்றாம் தரப்புக்கு பணத்தை மாற்ற மாட்டேன் எனச் சொன்னேன். உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரிடம் ₹5 கோடியை செலுத்துவேன், ஆனால் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்ற மாட்டேன் என உறுதியாகக் கூறினேன். அவர்கள் என்னை உடனடியாக கைது செய்வதாக மிரட்டினார்கள். என்னை கைது செய்யுங்கள் எனச் சொன்னேன். என் உறுதியைக் கண்டதும், அவர்கள் இணைப்பைத் துண்டித்துவிட்டனர்," என்று அவர் கூறினார்.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மல்ஹோத்ரா சென்ட்ரல் வங்கியில் இருந்து ₹9.68 கோடியும், எச்.டி.எஃப்.சி. வங்கியில் இருந்து ₹8.34 கோடியும், கோடக் மஹிந்திரா வங்கியில் இருந்து ₹4.90 கோடியும் எடுத்திருந்தார். இரண்டு வங்கிகளின் மேலாளர்கள் இந்த "டிஜிட்டல் கைது" சம்பவம் பற்றி தெரியாது என தெரிவித்தனர். மூன்றாவது வங்கியின் மேலாளர், மல்ஹோத்ரா அடிக்கடி தங்கள் கிளைக்கு வருவார் என்பதை நினைவு கூர்ந்தார். "அவர் தானே நேரில் வந்து பணம் மாற்றியதால், ஊழியர்கள் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை. அவர் பதட்டமாக இருப்பது போலவும் தெரியவில்லை. அவர் உட்கார்ந்து பேசி, சில சமயங்களில் டீ குடித்துக்கொண்டே இந்த பரிவர்த்தனைகளைச் செய்தார்," என்று அந்த மேலாளர் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us