பெண்களின் தனியுரிமையை மீறும் புகைப்படங்களை பொதுத்தளங்களில் வெளியிடக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. பெண்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுக்கும் நிலையில் அவர்களை அவமதிக்கும் விதத்தில் செயல்படக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான சசிகலா புஷ்பா, பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா, யூடியூப் மற்றும் டுவிட்டர் இந்தியா சமூக ஊடக தளங்கள் தனது எந்தவொரு "அவதூறு பரப்பும்" புகைப்படத்தையோ காட்சியையோ வெளியிடக்கூடாது என்று வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு விசாரித்தது. தங்கள் தளங்களில் இருந்து ஆட்சேபிக்கத்தக்க விஷயங்களை அகற்ற வேண்டுமென சமூக ஊடக தளங்களுக்கு நீதிமன்ற அமர்வு பரிந்துரைத்திருந்தது.
பேஸ்புக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, நீதிமன்றத்தில் இது ஒரு இடைக்காலத் தீர்வாக மட்டுமே இருக்கும் என்றும், எந்தவொரு உள்ளடக்கத்திலும் சமூக ஊடகங்கள் எதுவும் செய்யமுடியாது என்றும் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை சரிபார்த்து, அவற்றை அகற்றுவதற்கான ஒரு அமைப்பு சமூக ஊடகங்களிடம் உள்ளது என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்படத் தயாராக இருப்பதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
கூகுள் மற்றும் யூடியூப் சார்பில் வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் அருண் கத்பாலியாவும் பேஸ்புக் கூறியதைப் போலவே இதுவொரு இடைக்கால நிவாரணமாகவே இருக்கும் என்றும், URLகளை மட்டுமே முடக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்டபின், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து ஆலோசனை செய்வதற்கு ஜூலை 8ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிமன்ற அமர்வு, ஜுலை எட்டாம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.