நாளை (புதன் கிழமை) காதலர் தினத்தன்று மாணவர்கள் யாரும் பல்கலைக்கழகத்திற்கு சுற்றித் திரியக்கூடாது என, லக்னோ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், லக்னோ பல்கலைக்கழகம் இதுதொடர்பான அறிவிக்கையை கடந்த 10-ஆம் தேதி வெளியிட்டது. அதில், காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம் என குறிப்பிட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் மாணவர்கள் யாரும் பல்கலைக்கழகத்திற்குள் நுழையக்கூடாது எனவும், உள்ளே சுற்றித் திரியக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
இதனிடையே நாளை மகா சிவராத்திரி என்பதால் லக்னோ பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம்தான் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் எந்தவொரு தேர்வும், கூடுதல் நேர வகுப்புகளும் நடைபெறாது என பல்கலைக்கழக அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், பல்கலைக்கழகம் முழுவதும் நாளை மூடப்படும் எனவும், “அன்றைய தினம் எந்தவொரு மாணவரும் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்”, எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள், மாணவிகள் மீது எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
மேலும், காதலர் தினத்தன்று தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களையும் லக்னோ பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.