Advertisment

போதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது

கேரள சிபிஐ (எம்) செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை அமலாக்க இயக்குநரகம் வியாழக்கிழமை கைது செய்தது.

author-image
WebDesk
New Update
Bineesh Kodiyeri, Bineesh Kodiyeri arrested, Kodiyeri Balakrishnan, Drugs case, போதை மருந்து வழக்கு, கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கைது, அமலாக்கத்துறை இயக்குனரகம், அமலாக்கத்துறை கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது, கேரளா சிபிஎம் செயலாளர், Kerala CPM secretary kodiyeri balakrishnan son binish arrested, Kodiyeri Balakrishnan son, Enforcement Directorate, tamil indian express

கேரள சிபிஐ (எம்) செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை அமலாக்க இயக்குநரகம் வியாழக்கிழமை கைது செய்துள்ளது.

Advertisment

அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் பெங்களூரு அலுவலகத்தில் மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் பினீஷ் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக காலை 11 மணிக்கு சாந்திநகரில் உள்ள பெங்களூரு மண்டல அலுவலகத்திற்கு வந்தார். விசாரித்த பின்னர் அவர் காவலில் எடுத்து பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், அவர் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 22 ம் தேதி என்.சி.பியால் கைது செய்யப்பட்ட முகமது அனூப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக பினீஷை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தது இது இரண்டாவது முறையாகும். அவர்கள் பெங்களூரில் ரேவ் பார்ட்டிகளில் மருந்துகளை வழங்குவதில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அனூப் (38) மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, அக்டோபர் 6ம் தேதி பெங்களூருவில் பினீஷை அமலாக்கத்துறை விசாரித்தது. பெங்களூருவில் ஒரு ஹோட்டல் வணிகத்தைத் தொடங்க அனூப்பிற்கு பினீஷ் நிதி வழங்கியதாக என்சிபி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் தங்கக் கடத்தல் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கேரளாவில் உள்ள அமலாக்கத்துறையும் பினீஷை விசாரித்தது.

தற்செயலாக, பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கர்நாடகாவில் பெரிய பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பான விசாரணையில் ஆகஸ்ட் 22ம் தேதி என்சிபி கைது நடவடிக்கை எடுத்த பின்னர் இது தொடங்கியது.

இந்த கைது நடவடிக்கை குறித்து பாஜக தலைவரும், வெளிவிவகாரங்கள் துறை அமைச்சருமான வி.முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநில (கேரள) அரசு தங்கக் கடத்தல் வழக்கிலும், ஆளும் கட்சி போதைப்பொருள் வழக்கிலும் ஈடுபட்டுள்ளது. இதை விட பெரிய அவமானம் வேறு இருக்க முடியாது. இனியும் கொடியேரி பாலகிருஷ்ணன் மாநில செயலாளராக தொடர வேண்டுமா என்று சிபிஎம் சிந்திக்க வேண்டும்.” என்று கூறினார்.

இதனிடையே, எல்.டி.எஃப் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் மனோரமா செய்தி ஊடகத்திடம் கூறுகையில், “கட்சி செயலாளர் தவறு செய்தால், சிபிஎம் தார்மீக பொறுப்பை ஏற்கும். ஆனால், கட்சியின் செயலாளரின் மகன் செய்ததற்கு தார்மீக பொறுப்பு கட்சிக்கு இல்லை. இங்கே, கொடியேரி பாலகிருஷ்ணன் எந்தவொரு சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் முதலில் வந்தபோது, அவர் தனது மகனிடமிருந்து விலகி இருப்பதையும், தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார்.” என்று கூறினார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பினீஷை அமலாக்கத்துறை கைது செய்தது கேரள மக்களுக்கு அவமானகரமான விஷயம் என்று கூறினார். “இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிபிஎம் எவ்வாறு தலைமை தாங்குகிறது? இந்த கட்சி எந்த தலைவரை பாதுகாக்க முயற்சிக்கிறது? இது கேரள மக்களுக்கு வெட்கக்கேடானது. மேலும், அவர்கள் தலைகுணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தங்கக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் - ஒரு ஜனநாயக அரசாங்கம் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறது” என்று ரமேஷ் சென்னிதலா கடுமையாக விமர்சனம் செய்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகையில், “விசாரணையில் பாஜக தரப்பில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என்றால், இதுபோன்ற சிபிஎம் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இத்தகைய தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டும் கூடுதல் தடயங்கள் கிடைக்கும்” என்று கூறினார்.

நடிகரும் தொழிலதிபருமான பினீஷ் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. முந்தைய எல்.டி.எஃப் ஆட்சியின் போது தனது தந்தை உள்துறை அமைச்சராக பணியாற்றியபோது பினீஷ் சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டைப் பெற்றதாக 2013ல் அப்போதைய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். பல்வேறு குற்றங்களுக்காக அவர் மீது ஆறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஐந்து வழக்குகள் அவருடைய தந்தை பதவியில் இருந்தபோது திரும்பப் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதே போல, அவரது மூத்த சகோதரர் பினாய் சர்ச்சையில் சிக்குவதும் புதிதல்ல. சுற்றுலா ஆபரேட்டருக்கு ரூ.1.74 கோடி செலுத்த பினாய் தவறியதாகக் கூறி 2018ம் ஆண்டில் துபாய் போலீசாரால் அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், துபாய் அதிகாரிகள் அவர் மீது பயணத் தடை விதித்தனர். கடந்த ஆண்டு, மும்பையில் போலீசார் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். 33 வயதான பெண் ஒருவர் பினாய் தன்னை செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். அந்த வழக்கில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Kerala Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment