பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்ளை அருண் ஜெட்லி அறிவித்தார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் பட்ஜெட், டெல்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கல்வி, வேளாண்மை, மருத்துவம், போன்ற பல்வேறு துறைச் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்தார். இன்று 11 மணியளவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர், வரும் காலங்களில் அருண் ஜெட்லி அறிவித்துள்ள பட்ஜெட் ஏற்படுத்தப்போகும் மாற்றம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், 2018-19 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் உங்கள் பார்வைக்கு...
*ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்.
* டிஜிட்டல் வழி கல்வி. கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் போர்டு மூலம் கல்வி வழங்குதல்
*ஏகலவ்யா கல்வி திட்டம் மூலம், பழங்குடியினரின் பிள்ளைகளுக்கு கல்வி
*பி.டெக் மாணவர்களில் 1000 பேரை தேர்வு செய்து பி.எச்டி படிக்க வைத்தல்.
*24 புதிய மருத்துவ கல்லூரிகளை உருவாக்குதல்
*கல்வித்துறையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
*எஸ்.சி. மாணவர்களுக்கான பள்ளிகளும், ஆசிரியர்களுக்கான திட்டங்களையும் புதுப்பித்தல்.
*ஏகலவ்யா தனி கல்வி திட்டம் மூலம் ஆசிரியர் பயிற்சி அளித்தல்
* ஆசிரியர் பயிற்சி பெறாத 13 லட்சம் பேர்களுக்கு முறையான ஆசிரியர் பயிற்சி அளித்தல்.
நலிந்தோருக்கு நன்மை செய்யும் விதத்திலும், கல்வியை வலிமைப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டும் 2018- 19 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார்.