ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி 3வது கட்ட சோதனை குறித்து நிறைய தரவுகள் உள்ளதாகவும், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் 7-8 நாட்களில் எப்போது வேண்டுமோனாலும் வெளியிடப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (சி.டி.எஸ்.சி.ஒ) இதுவரை சமர்பிக்கப்பட்ட தகவல்களை தாண்டி மருத்தவ பரிசோதனையின் முடிவுகளின் தரவுகள் பத்திரிகையில் வெளியிடப்படும் என பால் கூறினார்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை கோவாக்சின் பயன்பாட்டுக்கு அவசர கால அனுமதி கோருவதற்கு பதிலாக முழு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் மூலம் அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டுக்கு வர தாமதமாகும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் பால் கூறுகையில், இந்த அறிவிப்பு நமது சொந்த தடுப்பூசி திட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஜூலை - செப்டம்பர் மாதத்திற்குள் உலக சுகாதார அமைப்பின் முழு ஒப்புதல்களை நிறுவனம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகளில் சுமார் 12 சதவீதம் கோவாக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பேசிய டாக்டர் பால், ஒவ்வொரு நாட்டின் (மருந்து) ஒழுங்குமுறை அமைப்பிலும் பொதுவான சில விஷயங்கள் இருக்கலாம். சில விஷயங்கள் வேறுபடலாம். நாங்கள் அதை மதிக்கிறோம். விஞ்ஞான கட்டமைப்பானது ஒன்றே ஆனால் அதன் நுணுக்கம் சூழலுக்கு ஏற்ப இருக்கும். இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியான பரிசீலனைகள். நுணுக்கம் வேறுபட்டிருக்கலாம். தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க வேண்டாமென்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.நாங்கள் அதை மதிக்கிறோம்" என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நமது (கோவாக்சின்) உற்பத்தியாளர்கள் அவர்களின் விதிமுறைகளுக்கு இணங்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
கோவாக்சின் 3வது கட்ட தரவுகள் பற்றி கூறும்போது, கோவாக்சின் பாதுகாப்பு குறித்து நிறைய டேட்டா உள்ளது. அவற்றின் 3ஆம் கட்ட பரிசோதனைகள் எங்கள் கண்காணிப்பின் கீழ் நடந்தது. 3ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் அடுத்த 7-8 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படும் என கூறினார்.
கோவாக்சின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் போது சுமார் 680 தன்னார்வலர்கள் பங்கேற்க மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. தற்போது கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வில் சுமார் 25,800 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் இரண்டாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்டு 14 நாட்கள் கழித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால அறிக்கையின்படி 78% பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில், பாரத் பயோடெக்கின் முதல் இடைக்கால ஆய்வுக்கு 43பேர் உட்படுத்தப்பட்டனர். கூடுதலாக 87 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இடைக்கால ஆய்வு முடிவுகள் ஆராயப்படும் எனவும்,இறுதி கட்ட ஆய்வு முடிவுகளுக்காக 130பேரை ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாரத் பயோடெக் கூறியிருந்தது. இரண்டாது இடைக்கால மற்றும் இறுதி பகுப்பாய்வு முடிவுகள் தற்போது சமர்பிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், இந்திய பொது சுகாதார சங்கம் (IPHA), இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் (IAPSM) மற்றும் இந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (IAE) ஆகியவற்றின் நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் படி இயற்கையாக தொற்றுநோய்களிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு தடுப்பூசி முன்னுரிமை கொடுப்பது குறைவாக இருக்க வேண்டும் என டாக்டர் பால் கூறினார்.
இதுபோன்ற முடிவுகளை இந்தியாவில் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) எடுக்கிறது என கூறினார். மருத்துவ ரீதியாகவும், தரவுகளை ஆராய்ந்தும் கோவிட் நோயாளிகளுக்கு நோயிலிருந்து மீண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போடலாம் என்ற முடிவை எடுத்ததாகவும், புதிய பரிந்துரைகளுடன் கூடுதல் தரவுகள் கிடைத்தால் அது கருத்தில் கொள்ளப்படும் என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.