பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்கள் ஈ.எஸ்.ஐ பங்களிப்பாக 0.75 (முந்தைய அளவு 1.75) சதவீதமும், நிறுவனங்கள் 3.25 சதவீதம் ( முந்தைய அளவு 4.75 சதவீதம்) செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 3 கோடி ஊழியர்களும் 12 லட்சம் நிறுவனங்களும் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறை, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.எஸ்.ஐ. பயன்களை பெற, 1997ம் ஆண்டிற்கு பிறகு அதன் பங்களிப்பு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்த பங்களிப்பு குறைப்பின் மூலம், ஈ.எஸ்.ஐ. திட்டத்தில் மேலும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சேர வழிவகை ஏற்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கான ஈ.எஸ்.ஐ. பங்களிப்பு குறைக்கப்பட்டதன் மூலம், அவர்களது நிதிச்சுமை பெருமளவு குறைவதோடு, அவர்கள் தங்கள் வர்த்தகத்தை மேலும் விரிவாகவும் மற்றும் துரிதமாகவும் செய்ய ஏதுவாக அமைந்துள்ளது.
தொழிலாளர்களுக்கு இந்த பங்களிப்பு குறைப்பின் மூலம், ஈ.எஸ்.ஐ. மருந்தகங்கள், மருத்துவமனைகள், டயக்னாஸ்டிக்ஸ் சென்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மருத்துவம், அறுவை சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு அதிகளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 70 சதவீத வருவாய் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சமாக 91 நாட்களுக்கான சம்பளம், பெண்களின் மகப்பேறு காலத்திற்கு 26 வாரங்கள் விடுமுறை மேலும் டாக்டர்களின் அறிவுரைப்படி 1 மாத கால கூடுதல் விடுமுறை, பணியின் போது மரணமடைந்தாலா அல்லது விபத்தில் ஊனமுற்றாலோ ஊழியர்களின் குடும்பத்திற்கு 90 சதவீத நிவாரணம் வழங்க ஈ.எஸ்.ஐ. அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈ.எஸ்.ஐ. பயன்களை பெற தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு ரூ.21 ஆயிரத்திற்கு மிகாமல் சம்பளம் பெறவேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.15 ஆயிரமாக இருந்த நிலையில், ரூ.21 ஆயிரமாக, கடந்த 2017ல் திருத்தியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.