2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளனர்.
முன்னதாக கட்சி கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், “நானும் நிதிஷ் குமாரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விரைவில் சந்திப்போம்.
பாத யாத்திரை முடிந்த பின்பு ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளோம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது மிக மிக அவசியம். அப்போதுதான் 2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய முடியும்” என்றார்.
முன்னதாக நிதிஷ் குமார் இம்மாத தொடக்கத்தில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இதன்மூலம் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து காங்கிரஸை விலக்கி வைப்பதில் தனக்கு மனமில்லை என சமிக்ஞை செய்தார்.
இதேபோல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா, முன்னாள் மத்திய அமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான சரத் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஐஎன்எல்டி தலைவர் ஓபி சவுதாலா ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் இல்லாமல் பாஜக அல்லாத எதிர்க்கட்சி உருவாக்கம் சாத்தியமில்லை என்று நிதிஷ் குமாருக்கு தெளிவாகத் தெரிந்தாலும், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) போன்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது அவ்வளவு சாத்தியம் இல்லை. இந்தக் கட்சிகள் காங்கிரஸின் தலைமையை ஏற்க தயாராக இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil