டெல்லியில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை போலி கல்விச் சான்றிதழ்களை விநியோகித்து வந்ததாக பட்டதாரி இளைஞர் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து, டெல்லி காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் பங்கஜ் அரோரா (35). இவர் டெல்லி ஹரிநகர் பகுதியில் எஸ்.ஆர்.கே.எம். எனும் பெயரில் போலியாக, கல்வி மற்றும் நல்வாழ்வு சமுதாயக் கூடத்தினை துவங்கி, அதன் மூலம் போலி சான்றிதழ்களை விநியோகித்து வந்துள்ளார். அவரின் கூட்டாளியும், ஏற்கனவே இத்தகைய புகாரில் கைது செய்யப்பட்டவரான பவிதர் சிங் என்பவரையும், அதே பகுதியில் அச்சகம் நடத்திவரும் கோபால் கிருஷ்ணா என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும் ஒரே செல்போன் மற்றும் இ-மெயில் முகவரி மூலம் 27 போலி இணையத்தளங்களை உருவாக்கி, போலி சான்றிதழ்களை தயாரித்து வந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
27 பல்கலைக்கழகங்களின் எம்.பி.பி.எஸ்., பி.எட்., ஜே.பி.டி., ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளின் சான்றிதழ்களை இவர்கள் தயாரித்து வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
முன்னதாக, எஸ்.ஆர்.கே.எம். கல்வி மற்றும் நல்வாழ்வு சமுதாயக் கூடம் குறித்து, நாளிதழ் ஒன்றில் வந்த விளம்பரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அந்த புகாரில், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணமாக 8 பேரிடம் பங்கஜ் அரோரா ரூ.1,31,000 கேட்டதாகவும், சில நாட்கள் கழித்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனால், புகார்தாரர் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த நிலையில், அவரது பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலி என அதிகாரிகள் கூறியபோதே அவருக்கு தெரியவந்துள்ளது.
இதேபோன்று, ஆயிரக்கணக்கானோருக்கு அவர்கள் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், அவை உண்மை சான்றிதழ்களுக்கு ஒத்ததாக இருக்கும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.