சத்தீஸ்கர் மாநிலத்தில் தன் ஆசையாக வளர்த்த நாயை கொன்றதாக கூறி, தன் மகன்கள் மீதே ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்மங்கல் சாய். இவர்தான், தான் ஒரு ஆண்டாக செல்லமாக வளர்த்துவந்த நாயை கொன்றுவிட்டதாக கூறி, தனது இரு மகன்கள் மீதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இறந்த நாயை சிவ்மங்கல் சுமார் 10 கிலோமீட்டர் தன்னுடைய மிதிவண்டியிலேயே வைத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். தன்னுடைய நாயை இரு மகன்களும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
“என்னுடைய நாய் ‘ஜப்பு’ என்றால் என் மகன்களுக்கு பிடிக்காது. அதனால், கூர்மையான ஆயுதத்தால் அதன் தலையில் தாக்கியுள்ளனர். அதனால், நாய் இறந்துவிட்டது. என்னுடைய செல்ல நாய்க்குட்டியை வளர்ப்பது, வீட்டிலுள்ள யாருக்கும் பிடிக்காது. இந்த சம்பவம் நடைபெற்றபோது நான் வீட்டில் இல்லை. என்னுடைய செல்ல பிராணி இறந்தது எனக்கு வருத்தமாக உள்ளது”, என சிவ்மங்கல் தெரிவித்துள்ளார்.
இறந்த அந்த நாய், சிவமங்கலின் மனைவியை பார்த்து எப்போதும் குரைத்துக்கொண்டிருக்கும் என்பதால், அம்மாவை கடித்துவிடுமோ என்ற பயத்தில் மகன்கள் இருவரும் நாயை கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இரு மகன்கள் மீதும் மிருகவதை தடுப்பு சட்டம் பிரிவு 429ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.