சகோதரர்கள் ராஜூ மற்றும் ரூபின், மற்ற மூன்று பேருடன் கடந்த புதன் கிழமை இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தமிழ்நாட்டு கடல் எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் அவர்கள் சென்றபோது, ஓகி புயல் அவர்களது படகை தாக்கியது.
அன்று முதல் சனிக்கிழமை மாலை வரை மழை நீரைதான் உணவாக கொண்டனர். படகிலிருந்த ஜி.பி.எஸ்., ஒயர்லெஸ் கருவிகள் எல்லாம் செயலிழந்துவிட்டன. கன்னியாகுமரியின் தேங்காய்பட்டணத்தில் வாங்கிய உணவும் புயலில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. படகின் ஒரு எஞ்சின், புயலால் பெரிய கட்டடங்களை தாண்டி எழுந்த அலையில் நாசமானது. ஒரேயொரு செல்ஃபோன் மட்டும்தான் இயங்கியது. அதனால், அவர்களுள் ஒருவரது மனைவியை அந்த செல்ஃபோன் மூலம் தொடர்புகொள்ள முடிந்தது.
இந்த மோசமான கடற்பயணத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான அவநம்பிக்கையில், சகோதரர்கள் மற்றும் அவர்களது சக மீனவர்கள், அந்தோனி ஆதிமா, ஆல்பின் மற்றும் வில்லரி ஆகியோர், 24 கேன்களில் இருந்த மண்ணெண்ணெயை கடல்மீது வீசி எரிபொருளைக் காலி செய்தனர்.
புயலில் சிக்கி திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜூ (வயது 48) கூறியதாவது, “கடவுளின் கிருபையால்தான் நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம் என நினைக்கிறேன்”. இவருடன் மற்ற சிலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “நாங்கள் புதன்கிழமை 60 நாட்டிகல் கடல் மைல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான், கடல் சீற்றம் கொண்டது. பெரிய அலைகள் எங்களை மூழ்கடித்தபோது, நாங்கள் வலைகளை படகுக்குள் இழுத்தோம்.”, என ராஜு தெரிவித்தார்.
படகில் ஒயர்லெஸ் கருவி உள்ளது, ஆனால், புயல் எச்சரிக்கையை அது அனுப்பவில்லை எனக்கூறும் ராஜூ, “பெரும் அலைகள் எங்கள் படகை மூழ்கடித்தது. கட்டடங்களை விட பெரிய அலைகள் அவை. நான் 10 வயதிலிருந்து கடலில் இருக்கிறேன். ஆனால், இத்தகைய பெரிய அலைகளை நான் பார்த்ததே இல்லை”.
“படகு ஒரு பக்கமாக சாய்ந்தபோது, நாங்கள் அதன் மற்றொரு பக்கத்திலேயே சுமார் 5 மணிநேரம் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.”, என்கிறார் ராஜூ.
வியாழக்கிழமை காலை காற்றின் வேகம் தணிந்தது. படகில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக, தண்ணீர் உட்புகுந்து கொண்டிருந்தது. படகில் எஞ்சினும் இல்லை. பிளாஸ்டிக் விரிப்புகள், துணிகளை வைத்து அந்த ஓட்டையை சரிசெய்ய முயற்சித்தனர். படகிலிருந்த தண்ணீரை வாளி மூலம் வெளியேற்றனர்.
“நாங்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் உள்ளது என்பதை உணர்ந்தோம். ஆனால், கிடைக்கும் எல்லாவற்றையும் முயற்சித்து கடைசி வரை வாழ்வுக்காக போராட வேண்டும் என விரும்பினோம்.”, என ரூபின் கூறுகிறார்.
“படகில் நாங்கள் தொங்கிக் கொண்டிருந்தபோது, எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் என கடவுளை வேண்டினோம். உணவு, குடிநீர் எல்லாவற்றையும் நாங்கள் இழந்தபோது, பிளாஸ்டிக் விரிப்பில் மழைநீரை பிடித்து அதனை உணவாக கொண்டோம்.”, என ராஜூ தெரிவித்தார்.
“படகை வெற்றிகரமாக செலுத்தி பாதுகாப்பான இடத்தை அடைந்தோம். ஆனால், நாங்கள் எங்கிருக்கிறோம் என்பது தெரியவில்லை”, என ராஜூ கூறினார்.
வெள்ளிக்கிழமை, படகில் ஒரு கேனில் எரிபொருள் இருந்ததை கண்டனர். அதன்மூலம், படகை மீண்டும் செலுத்தினர். ராஜூவின் செல்ஃபோன் மட்டும் செயல்பட்டது. அதனைவைத்து அவர் தன் மனைவி நிஷாவிடம் பேசினார். முதன்முறையாக, 5 பேரும் உயிருடன் இருக்கிறார்கள் என தேங்காய்பட்டணம் கிராமத்தினர் தெரிந்துகொண்டனர். அவர்களுக்கு உதவி தேவைப்படுவதையும் அறிந்தனர்.
”அவர் என்னை தொடர்புகொண்ட பின், உள்ளூரில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் அருட்தந்தையிடம் சென்று கூறினேன்”, என கூறும் ராஜூவின் மனைவி நிஷா, ஞாயிற்றுகிழமை காலை தான் மருத்துவமனைக்கு சென்றார்.
அதன்பின், கடற்படையை சேர்ந்த கப்பல் மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.