கர்நாடகா, கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உருவான நாள் இன்று (நவ.,1) கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள ஆளுநர் சதாசிவம், அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கேரளா உருவாகி இன்றோடு 60 ஆண்டுகள் ஆகிறது. 'கேரள பிறவி' எனும் பெயரில் அம்மாநிலத்தின் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயன், மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், கடந்த ஆண்டுகளில் மாநிலம் நிகழ்த்திய சாதனைகளையும் பட்டியலிட்டுள்ளார். மாநிலம் எப்படி உருவானது என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் 62-வது கர்நாடகா ராஜ்யோட்சவா விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா பலருக்கும் விருதுகள் வழங்கினார். வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, பின்னணிப் பாடகர் கேஜே யேசுதாஸ், எழுத்தாளர் வைதேஹி, ஹாக்கி வீரர் விஆர் ரகுநாத் உள்ளிட்ட பலருக்கும் அவர் விருதுகளை வழங்கி வருகிறார்.
இதன்பின் பேசிய முதல்வர் சித்தராமையா, "நான் வேறு மொழி கற்பதற்கு எதிரானவன் அல்ல. ஆனால், நீங்கள் கன்னடம் கற்கவில்லை எனில், அந்த மொழிக்கு நீங்கள் அவமரியாதை செய்வதாக அர்த்தம். கர்நாடகத்தில் வாழும் அனைவரும் கன்னடர்கள் தான். கர்நாடகத்தில் வாழும் அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், தங்களது பிள்ளைகளுக்கும் கன்னடம் கற்றுத் தர வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.