ஞாயிற்றுக்கிழமை காபூலில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் இந்தியர்கள் மற்றும் சரிந்த ஆப்கானிஸ்தான் அரசின் உறுப்பினர்கள் வந்தனர். ஏர் இந்தியா விமானம் காபூலில் இருந்து மாலை 6.06 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. தொழில் விஷயமாக ஹைதராபாத்தை சேர்ந்த ஷிவ் கிரண் என்பவர் காபூலிற்கு சென்றிருந்தார். இந்தியா திரும்பிய ஷிவ் கூறுகையில், தான் அங்கிருப்பு புறப்படும் வரை நகரம் வழக்கம்போல் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஷிவ் கிரண் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்,""நான் திங்கட்கிழமை வியாபார ரீதியாக காபூலுக்கு சென்றிருந்தேன். இந்த விமானம் எனது முன்பதிவு செய்யப்பட்ட விமானம். காபூலில் இருந்தபோது செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அங்குள்ள உள்ளூர் வணிக பங்காளிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்த திருப்புமுனையை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதி மீண்டும் போராடுவார் என்று அவர்கள் நினைத்தார்கள். இன்று காலை வரை நகரத்திற்கு வெளியே மோதலின் உணர்வு இல்லை. காபூல் தொடர்பான செய்திகளைப் பார்த்து எனது குடும்பம் கவலைப்பட்டது" என்றார்.
டெல்லி வந்த விமானத்தில் ஆப்கன் எம்பிக்கள், அதிபர் கனியின் நிர்வாகத்தின் பணியாற்றிய பல ஆப்கானியர்கள் வந்தனர். தாலிபான்களின் கீழ் தங்கள் நாடு தங்களுக்குப் பாதுகாப்பானதா என்ற நிலைமையை மதிப்பிடுவதற்கு இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக இருந்த ரிஸ்வானுல்லா அஹ்மத்ஸாய் கூறுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்களின் வன்முறையை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் இந்த முறை அது மிகவும் வன்முறையாகத் தெரியவில்லை. ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு காபூலில் நிலைமை என்ன என்பதைப் பார்த்து பின்னர் திரும்பிச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருக்கின்றனர். அவர்களால் விசா பெற முடியவில்லை, ஆனால் எனது இராஜதந்திர விசா காரணமாக என்னால் வர முடியும்" என்றார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் தூதரகங்கள் செயல்படுகின்றன. விசா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை அடுத்த சில நாட்களில் மூடப்படும் என்று கூறினார்.
டெல்லி வந்த பாக்தியா மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி. சையத் ஹசன் பக்தியாவால் சில கூட்டங்களில் கலந்து கொள்ள வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் "நான் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஆனால் இங்கே சந்திப்புகளை நடத்துகிறோம். நான் விரைவில் திரும்புவேன் என்று நம்புகிறேன். தாலிபான்கள் முன்பு போல் இல்லை. அதனால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். ஆனால் இப்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதும் இப்போது நான் வந்த பாக்தியா உட்பட தலிபான்களின் கீழ் உள்ளது" என்றார்.
மற்றொரு எம்.பி.அப்துல் காதிர் ஜஸாய் கூறுகையில்,"தற்போதைய சூழ்நிலை காரணமாக நான் வெளியேறவில்லை. எனது நண்பர்களைச் சந்திக்க, வியாபாரம் செய்ய சில நாட்கள் இங்கு வந்துள்ளேன். அரசை பொறுத்தவரை உயர் பதவிகள் அனைத்தும் இல்லாமல் போகும். இடைக்கால அரசின் கீழ் அரசு ஊழியர்கள் 6 மாதங்கள் இருப்பார்கள். ஆனால் எங்கள் பாதுகாப்பு குறித்து, தாலிபான் பிரகடனத்தின்படி அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.