ஆர்.சந்திரன்
பிரதமர் மோடியின் நெருங்கிய வட்டத்தின் முக்கிய உறுப்பினரான நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலமின்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வீட்டில் இருந்தபடியே அலுவலகக் கோப்புகளை பார்க்கும் அவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பொருளாதாரப் புலிகளின் குழுவுடன் உரையாடவும், "2022ல் உலகப் பொருளதாரம் பற்றி இந்தியாவின் பார்வை" என்ற தலைப்பில் உரையாற்றவும் அவர் அடுத்த வாரம் இங்கிலாந்து பயணிக்கும் திட்டத்தில் இருந்தார். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பால், அவரது இங்கிலாந்து பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதமே, அர்ஜென்டினாவில் நடந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிருந்த பயணத்தை அருண் ஜெட்லி ரத்து செய்திருந்தார். அப்போது அவ்வளவு தூர விமான பயணம் செய்யக் கூடாது என்ற மருத்துவ ஆலோசனையின் பேரில் அது ரத்து செய்யப்பட்டது, இந்நிலையில் தற்போது இங்கிலாந்து பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையில் இருந்தே ஜெட்லி நிதியமைச்சக அலுவலகம் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 2014ம் ஆண்டு, தனது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்காக அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போதைய அவரது உடல்நிலையால், உத்திர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதையொட்டி பதவியேற்பிலும் இன்னும் பங்கேற்கவில்லை.
65 வயதாகும் அருண் ஜெட்லி, எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் ஆலோசனையை ஏற்று, தேவையானால் விரைவில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது