Pranab Mukherjee Coronavirus News : கொரோனா பாதிப்பை உறுதி செய்ததை அடுத்து, தன்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சோதனை செய்ய இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
பிரணாப் முகர்ஜி வெளியிட்ட ட்வீட் செய்தியில்,“ கொரோனா தொடர்பில்லாத தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக இன்று மருத்துவமனைக்குச் சென்றபோது கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில்,எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து தங்களை சுய தனிமைப்படுத்தல் மேற்கொள்ளுங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள நான் வேண்டுகிறேன் ” என தெரிவித்தார்.
முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் உயர் மட்ட அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் இன்று மட்டும், 62,064 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது. புதிதாக 1,007 பேர் உயிரிழந்திருப்பதையடுத்து, கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 54,859 பேர் குணமடைந்திருப்பதையடுத்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,35,743 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil