சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’யும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாய் நிர்மல் சிங் கல்சா கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலையில் காலமானார்.
சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் சீக்கிய சுசோகங்களை இசைக்கும் ஹசூரி ராகியாக இருந்தவர் பாய் நிர்மல் சிங் கல்சா. இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
பொற்கோயில் முன்னால் ஹசூரி ராகியான பத்மஸ்ரீ பாய் நிர்மல் சிங் கல்சாவுக்கு கொரோன வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், சில மணி நேரங்கள் கழித்து வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு காலமானார். அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் அமிர்தசரஸில் உள்ள குருநாணக் தேவ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பொற்கோயில் ராகியை எப்படி கொரோனா வைரஸ் பாதித்தது என்று உடனடியாக தகவல் தெரியவில்லை. அவர் அமெரிக்காவில் இருந்து விருந்தினர்களை சந்தித்த மார்ச் முதல் வாரத்தில் இருந்து சுகாதார அதிகாரிகளின் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் மார்ச் 30-ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய பயண விவரங்கள் வியாழக்கிழமை மாலை வரை தெளிவற்று இருந்தது.
சண்டிகரில் உள்ள செக்டார் 27 ஏ-வில் உள்ள ஒரு வீட்டிற்கு மார்ச் 19 ஆம் தேதி ராகி வருகை தந்துள்ளார். அங்கே அவர் சுமார் 100 பேர் முன்னிலையில் கீர்த்தனை பாடியுள்ளார். இதையடுத்து, அவர் மார்ச் 20-ம் தேதி அமிர்தசரஸ் திரும்பினார்.
சண்டிகரில் இருந்து திரும்பிய பின்னர், ராகி மார்ச் 21-ம் தேதி அன்று அமிர்தசரஸ் அரசு மருத்துவக் கல்லூரியின் குரு நானக் தேவ் மருத்துவமனைக்குச் சென்று அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். இருப்பினும், மருத்துவர்கள் சில மருந்துகளை அளித்த பின்னர் அவரை வீட்டிற்கு திருப்பி அனுப்பினர். அவரது உடல்நிலை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், அவர் மார்ச் 24-ம் தேதி அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால், மீண்டும் ஸ்ரீ குரு ராம் தாஸ் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து அவர் மீண்டும் குரு நானக் தேவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ராகிக்கு ஆரம்பத்தில் அவசர வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், காய்ச்சல் வார்டுக்கு அனுப்பப்பட்டார். பின்னர், இறுதியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
பொற்கோயில் முன்னாள் ராகி, அமிர்தசரஸ் மருத்துவமனையில் 4வது கொரோனா வைரஸ் நோயாளியாக இருந்தார். அங்கே இதுவரை ஒரு நோயாளி குணமடைந்துள்ளார். மேலும் குரு நாணக் தேவ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த 2 நோயாளிகள் இறந்துள்ளனர். மற்றொரு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொற்கோயிலின் முன்னாள் ஹசூரி ராகி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.