வங்கிக் கடன் மோசடி, நிதி மோசடி மற்றும் ஊழல் எனப் பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அவசர சட்ட மசோதாவைக் கடந்த மாதம் 12-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு.
ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கியதால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடித் தலைமறைவானவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பின்னர், இந்த அவசர சட்டம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டது. இதையடுத்து சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த மசோதாவால், வங்கி மோசடிகளில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா
மற்றும் நீரவ் மோடி ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.