கவலை தரக்கூடிய கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிக ஆபத்து மற்றும் அதிக வெளிப்பாடு கொண்ட 40 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் அளிக்க, சிறந்த மரபணு விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர் என்று இந்திய கொரோனா (SARS-CoV2) ஜெனோமிக்ஸ் சீக்வென்சிங் கன்சார்டியத்தின் (INSACOG) வாராந்திர புல்லட்டின் தெரிவிக்கிறது. INSACOG என்பது வைரஸின் மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தேசிய சோதனை ஆய்வகங்களின் நெட்வொர்க் ஆகும்.
"முதலில் அதிக ஆபத்து அல்லது அதிக வெளிப்பாடு உடையவர்களைக் கருத்தில் கொண்டு, இதுவரை தடுப்பூசி போடப்படாத ஆபத்தில் உள்ள எஞ்சியிருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மற்றும் 40 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் அளிப்பதற்கு பரிசீலிக்க வேண்டும். தற்போதைய தடுப்பூசிகளில் இருந்து குறைந்த அளவிலான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகள் ஒமிக்ரானை நடுநிலையாக்குவதற்கு போதுமானதாக இருக்காது. இருப்பினும் கடுமையான நோய்க்கான ஆபத்து இன்னும் குறைக்கப்படலாம்" என்று INSACOG வாராந்திர புல்லட்டின் கூறுகிறது.
புதிய மாறுபாட்டை முன்கூட்டியே கண்டறிவதற்கு மரபணு கண்காணிப்பு முக்கியமானதாக இருக்கும் என்றும் புல்லட்டின் கூறுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அங்கிருந்து வெளியில் செல்வோரைக் கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோயியல் தொடர்பு உள்ள பாதிப்புகளின் தொடர்புத் தடமறிதல் மற்றும் சோதனையை அதிகரிப்பது ஆகியவற்றையும் புல்லட்டின் பரிந்துரைக்கிறது.
தொடர்பு கொண்ட போது, சில INSACOG உறுப்பினர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், பரவும் மரபணு வகைகள் மற்றும் வைரஸின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், நோய்த்தொற்று அல்லது தடுப்பூசி செயல்திறன், ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக குறைவாக இருக்கலாம், இது மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான "நல்ல வாய்ப்பு" என்று ஒரு "பொதுவான நம்பிக்கை" உள்ளது. இந்தச் சூழலில்தான், ஒரு பூஸ்டர் டோஸிற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன, ஆனால் INSACOGக்கிற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தகுதியுள்ள அனைவருக்கும் முதலில் முழுமையாக தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே இப்போது முன்னுரிமை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
பிரபல வைராலஜிஸ்ட் பேராசிரியர் ஷாஹித் ஜமீல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்த நேரத்தில், இரண்டு டோஸ்கள் மூலம் முடிந்தவரை பலருக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். UK இன் Cov-Boost 2ஆம் கட்ட சோதனையைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸ்களின் தேவை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இதில் ஆறு வெவ்வேறு பூஸ்டர்கள் பாதுகாப்பானவை மற்றும் AstraZeneca (இந்தியாவில் கோவிஷீல்டு) அல்லது Pfizer-BioNTech தடுப்பூசிகளை இரண்டு டோஸ்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது என்று கூறினார்.
“COV-BOOST சோதனையானது அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர், மாடர்னா மற்றும் நோவாவாக்ஸ் தடுப்பூசிகள் உட்பட பூஸ்டர்களுக்கான பல்வேறு சேர்க்கைகளை சோதித்துள்ளது. இந்தியாவில் எதிர்கால பூஸ்டர் டோஸ்களுக்கு, கோவிட் (NEGVAC) க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவிற்கு இது ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்,” என்று ஜமீல் கூறினார்.
அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியரான கௌதம் மேனன், வயது வந்தோரின் முழு இரண்டு டோஸ் கவரேஜை உறுதி செய்வதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றார். மேலும், "அதற்குப் பிறகு அல்லது அதற்கு இணையாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அனைத்து வயதினருக்கும் பூஸ்டர் ஷாட்டை முன்னுரிமை அளிப்பது ஒரு விவேகமான நடவடிக்கையாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைத் தொடர்ந்து ஆன்டிபாடி அளவுகளில் பூஸ்டர் டோஸின் குறிப்பிடத்தக்க விளைவை இங்கிலாந்தின் Cov-Boost சோதனை காட்டியதாக கௌதம் மேனன் மற்றும் பிற நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், ஓமிக்ரானுக்கு எதிராக ஒரு பூஸ்டர் டோஸ் எவ்வளவு நன்றாக வேலை செய்யும் என்பது குறித்த தரவு எதுவும் தற்போது கிடைக்கவில்லை. "இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் இது புரிந்துகொள்ளத்தக்கது" என்று கௌதம் மேனன் கூறினார்.
மரபணுவியலில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானியும், ஹைதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர்-சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலஜியின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் ராகேஷ் மிஸ்ரா, மூன்றாவது டோஸ் எவ்வளவு உதவும் என்பது குறித்து மேலும் சோதனைகள் மற்றும் சான்றுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
"தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, மேலும் தீவிரத்தன்மை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கின்றன என்பது அறியப்படுகிறது. வைரஸ் நம்மைச் சுற்றி இருக்கப் போகிறது மற்றும் நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை அழைப்புதான் இந்த ஒமிக்ரான். தடுப்பூசிகளைப் பொறுத்த வரையில், எந்த விவாதமும் இல்லை. முதலில் இரண்டு டோஸ்களைக் கொடுத்து, இதுவரை தடுப்பூசி போடப்படாத பெரிய எண்ணிக்கையிலான மக்களைப் பாதுகாக்க வேண்டும்," என்று ராகேஷ் மிஸ்ரா கூறினார்.
“அதிக வேகத்தில் போதுமான தடுப்பூசிகளை வழங்குவதற்கு போதுமான ஆதாரங்கள் நம்மிடம் இருந்தால், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு பூஸ்டரை வழங்குவது சாத்தியமாகும். இருப்பினும், தடுப்பூசி பற்றாக்குறை இருக்கக்கூடாது, மேலும் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் முதல் டோஸ் வழங்கப்பட வேண்டும், ”என்று ராகேஷ் மிஸ்ரா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.