திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 1300 கிராம் எடையிலான மூன்று தங்க கிரீடங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல நெய்வேத்தியம் படைக்கப்பட்ட பின்னர் கோவிலின் பிரதான வாசல் அடைக்கப்பட்டது. பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் கதவுகள் திறக்கப்பட்ட போது சுவாமி சிலைகளான மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கிரீடங்கள் களவு போயிருந்தது தெரியவந்தது.
நேற்றிரவு 10.30 மணியளவில் கிரீடங்கள் காணாதது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கண்காணிப்பு பிரிவின் சார்பில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் துணை செயல் அலுவலர் கோலா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரண்டு டிஸ்.எஸ்.பிக்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கி இருப்பதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறியுள்ளார்.
மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த கிரீடத்தின் எடை 528 கிராம் எனவும், ஸ்ரீதேவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த கிரீடம் 408 கிராம் எடை கொண்டதாகவும், பூதேவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த கிரீடம் 415 கிராம் ஆகவும், மொத்தமாக 3 கிரீடங்களின் எடையும் 1,351 கிராம் என தெரியவந்துள்ளது. இந்த கிரீடங்களில் விலைமதிப்புமிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இவை 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரீடங்கள் என்பதால் விலை மதிப்புமிக்கவையாகும்.
தற்பொழுது முதற்கட்ட சோதனையாக கோவிலின் அனைத்து சிசிடிவி கேமராகளின் வீடியோ பதிவுகளும் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.